June 10, 2013

சுருண்ட அணிகள், அச்சுறுத்திய மாலிங்க & அசையாத சௌதீ - ICC Champions Trophy - Game 4

குறைவான ஓட்ட இலக்குகள் வைக்கப்படுகின்ற போட்டிகள் அதிக ஓட்டங்கள் மழையாகப் பொழிகிற போட்டிகளை விட அதிக சுவாரஸ்யமாக இருப்பது வழமை.

வெறும் 139 ஓட்டங்களே இலக்காக வழங்கப்பட்ட போட்டி ஒன்றில் 19 விக்கெட்டுக்களை மொத்தமாக வீழ்ந்தது கண்டோம் .

அவசர ஆட்டமிழப்புக்கள், அதிரடி ஆட்டமிழப்புக்கள், துல்லியமான விட்டுக்கொடுக்காத பந்துவீச்சுக்கள், தடுமாறிய நடுவர்கள், நம்பமுடியாத அபார களத்தடுப்புக்கள், நகத்தை மட்டுமல்லாமல் விரல்களையே கடித்துத் துப்புமளவுக்கு பதற்றம், பரபரப்பைத் தந்த விறுவிறுப்புக் கணங்கள் எல்லாவற்றையும் தாண்டி, இதை விட மிக நெருக்கமாக ஒரு போட்டி இருக்க முடியாது என்ற அளவில் நியூ சீலாந்து நேற்று இறுதி விக்கெட்டினால் வெற்றியீட்டியது.

இலங்கை 38வது ஓவரில் 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த பிறகு இந்தப் போட்டி பூட்ட கேஸ் தான் என்று அவசரப்பட்டு(?) முடிவேடுத்தவர்களில் நானும் ஒருவன்.

திடீரெனப் பார்த்தால் ஐந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்த நிலையில் இந்தப் போட்டியில் சுவாரஸ்யம் இன்னமும் இருக்கிறது என்று எதிர்பாக்க ஆரம்பித்தேன்.

ஐம்பது ஓவர்கள் நிற்க முடியாத அணி, பொறுப்பற்ற துடுப்பாட்டத்தால் 138 ஓட்டங்களை மட்டும் பெற்ற அணி பந்துவீச்சில் எவ்வளவு போராடினாலும், மற்ற அணி இதை விட மிக மோசமானதாக இருந்தால் ஒழிய வெல்லக் கூடாது என்பதே சரியானது.

சங்கக்காரவைத் தவிர வேறு யாரும் ஒரளவுக்கு சராசரியாகவாவது துடுப்பெடுத்தாடாத நிலையில், லசி மாலிங்கவைத் தவிர விக்கெட்டுக்களை எடுப்பதற்கு அதிர்ஷ்டத்தையே நம்பியிருந்த நிலையில், துல்லியமான பந்துவீச்சு (மக்லெனகன்), அபார களத்தடுப்பு (நேற்றைய உதாரணம் சாகசப் பாய்ச்சலில் பிடிஎடுத்த தலைவர் பிரெண்டன் மக்கலம்), பொறுமையான அணுகுமுறையுடன் கூடிய துடுப்பாட்டம் (மக்கலம் சகோதரர்கள் மற்றும் மாலிங்கவின் இரு ஓவர்களைத் தடுத்தாடிய சௌதீ) ஆகியவற்றை நேற்று வெளிப்படுத்திய நியூ சீலாந்து வென்றதே மிகப் பொருத்தமானது.

ஆனால் குறைவான ஓட்டங்களுக்கு சுருண்டவுடன் பல அணிகள் மனரீதியில் மிக மோசமாக வீழ்ந்து நம்பிக்கையிழந்துவிடும்.
ஆனால் இலங்கை அணி போராடிய விதமும், இறுதிவரை விக்கெட்டுக்களைக் குறி வைத்து ஆக்ரோஷமாக விளையாடியதும் பாராட்டுதற்குரியதே.

நடுவர் ரொட் டக்கரின் தவறான இரு தீர்ப்புக்கள் - முக்கியமாக மாலிங்கவின் அபாரப் பந்து ஒன்று சௌதியின் பாதத்தில் பட்டும் துடுப்பு என்று நான்கு ஓட்டங்களை வழங்கியது, இறுதியில் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பாக அமைந்தது.

இதே நியூ சீலாந்தின் ஆட்டவேளையில் வெட்டோரிக்கு தவறான ஆட்டமிழப்பை வழங்கி வெளியேற்றியதற்கு இப்படி ஈடுகட்டப்பட்டதோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

எனினும் இப்படியான போட்டிகளில் ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்படும் தொலைக்காட்சி நடுவரிடம் மேன்முறையீடு செய்யப்படும் (Reviews) ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவ்வவ்வணிகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத சந்தர்ப்பங்களில், தவறான ஆட்டமிழப்புக்களைத் திருத்தவோ / சரியான ஆட்டமிழப்புக்கள் வழங்கப்படாமல் இருப்பதை நிறுத்தவோ முடியாமல் போகும்.

அதிலும் நேற்றைய போட்டி போன்ற போட்டிகளாக இருந்தால் போட்டியின் இறுதி முடிவிலும் இவை பெரிய தாக்கங்களை செலுத்தக்கூடும்.
நேற்று சௌதீக்கு ஆட்டமிழப்பு வழங்கப்பட்டிருந்தால் இலங்கை அரையிறுதி வாய்ப்பை அடுத்த போட்டியில் பெற்றுக்கொள்ளும் வலுவான நிலையில் இருக்கக் கூடும்.

ஆனால் கிரிக்கெட்டில் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களையும் இதை விட மோசமான நிலைமைகளையும் நாம் எதிர்பார்த்தே ஆகவேண்டும்.
நான் அடிக்கடி சொல்வது போல "There is no IFs and BUTs in cricket".

எனவே குறைந்த ஓட்டங்களுக்குள் சுருளக் காரணமாக அமைந்த துடுப்பாட்ட வீரர்களின் அசமந்தப் போக்கைக் கண்டித்து அவர்கள் அடுத்த இரண்டு போட்டிகளை இலங்கை வெல்வதற்குத் தம் பங்களிப்பை வழங்குவதற்குத் துணை வருவதை உறுதிப்படுத்தவேண்டியது தான்.


மாலிங்கவைத்  திட்டித் தீர்த்திருந்த நாவுகளும் மனதுகளும் நேற்று அவரை இலங்கை அணியின் காவலராகப் பார்த்திருந்தன.
மத்தியூஸ் அழைத்து விக்கெட் ஒன்றைப் பிடுங்கித் தரக் கேட்ட நேரம் எல்லாம் விக்கெட்டுக்களை எடுத்த துல்லியமும், ஒவ்வொரு பந்துமே எதிரணியை அச்சுறுத்தியதும் எல்லாப் பந்துவீச்சாளராலும் இயலாத ஒன்று.

மாலிங்கவின் ஓவர்கள் பத்தையும் கடத்தி முடிப்பதற்கு நியூ சீலாந்து கடை நிலை வீரர்கள் எடுத்த பிரயத்தனம், குறிப்பாக டிம் சௌதியின் அபார தடுப்பாட்டம் ஒரு விறுவிறுப்பான நாவல் தான்.

ரசித்த இன்னும் சில விஷயங்கள்.
சங்காவின் துடுப்பாட்டம்
பிரெண்டன் மக்கலமின் நம்பமுடியாத பாய்ச்சல் பிடி
மாலிங்கவின் யோர்க்கர்கள்
திசர பெரேராவின் கண்கட்டி வித்தை போல அமைந்த ரன் அவுட்டுக்கான எறி

இனி இலங்கை அடுத்துவரும் இரு போட்டிகளையும் வென்றாலே அரையிறுதி பற்றி சிந்திக்கலாம்.
மத்தியூஸ் தன்னையும் அணியையும் நிதானப்படுத்துவாரா பார்க்கலாம்.

-----------------

B பிரிவில் தத்தம் முதல் போட்டிகளில் தோற்ற இரு அணிகளும் இன்று தங்கள் முதல் வெற்றியைப் பெற்றுக் கொள்ளவும், தொடரில் வெளியேறாமல் தப்பித்துக்கொள்ளவும் இன்று இத்தொடரின் முதலாவது பகல் - இரவுப் போட்டியில் மோத இருக்கின்றன.

பயிற்சி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் சந்தித்த வேளை ஆச்சரியப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியிலும் உபாதைக்குள்ளாகியிருக்கும் டேல் ஸ்டெய்ன் விளையாட மாட்டார் என்பது தென் ஆபிரிக்காவுக்கு அவ்வளவு நல்ல செய்தியல்ல.
மோர்க்கலும் இல்லாத தென் ஆபிரிக்க அணி பாகிஸ்தானை விட வேகப்பந்துவீச்சுப் பக்கமாகப் பலவீனமாகவே தெரிகிறது.

ஆனால் பாகிஸ்தான் அணியின் வழமையான துடுப்பாட்டம் கொழும்பு மழை போல..
எப்போது அடித்துப் பெய்யும், எப்போது போக்குக் காட்டும் என்பது யாருக்குமே தெரியாது.

இரண்டு பச்சை அணிகளின் மோதல் இன்றிரவு எந்த அணியை வெளியே அனுப்பி வைக்கும் எனப் பார்ப்போம்.

----------------
இன்று காலமான இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் நடுவர் கந்தையா பிரான்சிஸ் (K.T.Francis) அவர்களுக்கு அஞ்சலிகள்.

இலங்கை அணியின் முதலாவது டெஸ்ட் போட்டியில் நடுவராகக் கடமையாற்றிய இவர், இலங்கை சார்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடுவர் குழாமுக்குத் தெரிவான முதல் நடுவர் என்பதும் பெருமைக்குரிய விஷயம்.

இறுதிக்காலத்தில் நீரிழிவு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தன் இரு கால்களையும் அகற்றவேண்டிய நிலைக்கும் ஆளாகியிருந்தார்.

இலங்கைக்கு 80கள், 90களில் விஜயம் செய்த அணிகளினால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த நடுவர்களில் ஒருவரான பிரான்சிஸ் பின்னைய நாட்களில் நல்ல நடுவராக ஓரளவுக்காவது பெயர் பெற்றவராவார்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner