வெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...

7/31/2010 07:07:00 PM

(21) Comments

(வெள்ளி) அதிகாலை வெற்றி FM மற்றும் இதர இரு வானொலிகள்,இரு தொலைக்காட்சிகள் அடங்கியுள்ள Voice of Asia Networks நிறுவனத்தின் மீதான காடையர் தாக்குதலின் மேலதிக விபரங்களை,புகைப்படங்கள்,காணொளிகளுடனும் இன்னும் வானொலி செய்திகள் வாயிலாகவும் அறிந்திருப்பீர்கள்.


தமிழ் மிர்ரர் தந்த செய்தி+காணொளி 
http://www.tamilmirror.lk/index.php?option=com_content&view=article&id=4864:2010-07-30-12-12-23&catid=46:2009-08-19-03-41-17&Itemid=110




பாதுகாப்பு உத்தியோகத்தரின் இரத்தத் துளிகள். 


எமது வானொலி ஓரளவுக்கு வழமைக்குத் திரும்பி சேவையை நடத்தி வருகின்ற போதும்,தீக்கிரைக்குள்ளான பகுதியினூடாக ஒலிபரப்பாகி வந்த சில பகுதிகளுக்கான சேவை செயலிழந்து விட்டது.


செய்திகள் அறவே இல்லை. இடையே இரு விசேட செய்தித் தொகுப்புக்களை (இத் தாக்குதல் சம்பந்தமாக)வழங்கி இருந்தோம்.


தொலைக்காட்சிகள் இரண்டுமே முற்றாக செயற்படமுடியாத நிலையிலிருந்து மீண்டு இப்போது வழமையான நிகழ்ச்சிகளுக்குத் திரும்பியிருக்கிறோம்.
தீயணைப்பு இயந்திரம்..


காயமுற்ற மூன்று ஊழியர்களில் உதவி ஆசிரியர் ரஜினிகாந்த் , செய்தியாளர் லெனின் ஆகியோர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியிருக்கிறார்கள்.


தலையில் பலமாகத் தாக்கப்பட்ட வாயில் பாதுகாவலர் இன்னமும் வைத்தியசாலையில்.


இன்று இலங்கையின் எல்லா மொழி நாளேடுகளிலும் நேற்றைய இந்தத் தாக்குதல்+தீக்கிரை சம்பவம் தான் தலைப்பு செய்தி.
ஒவ்வொருவர் ஒவ்வொரு வித ஊகங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
வரவேற்பறை 


ஆனால் நாங்கள் எம் அலுவலகம் சார்பாக இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.
முகாமைத்துவத்தில் உள்ளவன் என்ற அடிப்படையில் இந்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஊடகங்களுக்கு திங்கட்கிழமை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளோம்.


ஆனாலும் நேற்று எமது நேயர்களுக்கு வெற்றி வானொலி மூலமாக நாம் சொன்னது போல..


யார் இவர்கள்? ஏன் செய்தார்கள்?
நாம் பகையை எவ்விதமாகவும் தேடிக் கொண்டதுமில்லை.
பகைவர் யாரும் எமக்கு இல்லை.


இது தான் எங்கள் நிலை.


இது வரை மிரட்டல்கள் வந்ததில்லை.நேரடி நெருக்கடிகளை நாம் எதிர்கொண்டதில்லை.
சக ஊடகங்களுடனும் மிக நாகரிகமான அணுகுமுறைகளையே கடைக்கொண்டிருக்கிறோம்.

வெடிக்காமல் விழுந்து கிடந்த தோட்டா 

உயர் பாதுகாப்பு வலயம் என்பதனால் எம் நிறுவனம்,அருகிலுள்ள வங்கி,மொபிடேல் தலைமை அலுவலகம் ஆகியன எப்போதுமே அதிக பாதுகாப்பை நாடியதில்லை.


செய்திகளைக் குறி வைக்க என்ன காரணம்?


ஆரம்பம் முதலில் எம் செய்திகள் உண்மையான நடுநிலையின் பிரகாரம் இருந்தன.
இதற்காக, பொய்களைப் பரப்பக் கூடாது என நாம் சில செய்திகளை எடுக்காமலேயே விட்டிருக்கிறோம்.
மனிதாபிமான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்க நாம் தலைப்பட்டதும் அதனால் தான்.


அண்மையில் பெறப்பட்ட தரப்படுத்தலிலும் கடந்த காலத்தை விட அதிக முன்னேற்றம் நாம் கண்டுள்ளதும் எமது அனுசரணையாளர்களால் இத் தாக்குதலின் பின்னர் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.





செய்தி அறைக்குத் தீ வைத்த பின்னர் வந்தோர் எமது வரவேற்பறையின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஆனால் வானொலிக் கலையகங்கள் உள்ள பகுதியின் வாயில் வரை வந்தும் அங்கே சிறு சேதங்களை ஏற்படுத்திய பின்னர் ஏனோ உள்ளே நுழையவில்லை.
தொலைக்காட்சிப் பகுதிக்குள் நுழையும் வழி அவர்களுக்கு தெரியவில்லை என ஊகிக்கிறேன்.


இந்த முகமூடி ஆயுததாரிகளுக்கு சில கட்டளைகள் இறுக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன்.
காரணம் அவர்கள் மூர்க்கத்தனமாகக் காயப்படுத்தினார்களே தவிர கொலை செய்ய எத்தனிக்கவில்லை.(செய்துபோட்டாலும் தடுத்திருக்க முடியாது)


கண்ணாடிகள் எல்லாவற்றையும் அடித்து தூளாக்கியவர்கள்,வரவேற்பறையிலிருந்த மீன் தொட்டியில் கை வைக்கவில்லை.


இந்த சேதங்கள் மிகப் பாரியவை..பொருளாதார அடிப்படையிலும் செய்தி சேகரிப்பிலும்.
பொருட்கள் காப்புறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.
செய்தி+தகவல் மூலங்களின் Back upsஉம் அங்கேயே தான் இருந்தது.


யார் எதிர்பார்த்தார் எமக்கு இப்படி நேரும் என்று?


எனக்கும் இன்னும் எம்மில் சிலருக்கும் இப்படியான அனுபவங்கள் அடிக்கடி நிகழ்ந்து பழகிப் போய்விட்டது.
ஆனால் அண்மையில் எமது வெற்றி குழுவில் இணைந்துகொண்ட புதிய அறிவிப்பாளர் சீலன் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
வந்தவர்கள் செய்த கோரங்களைக் கண்டதும்,பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்கப்பட்டதும் அவரை பயங்கரமாகப் பாதித்துள்ளன .
வேலையை விடும் அளவுக்குப் பயந்துள்ள அவரை நான் கொஞ்சம் தேற்றி 
"இதற்கு எல்லாம் பயந்தால் உலகில் எங்குமே ஊடகவியலாளனாகக் கடமையாற்ற முடியாது" என்று சொன்ன பின் இப்போது பையன் கொஞ்சம் அமைதியாக உள்ளார்.
பாவம்.


இப்படி எத்தனை பேர் இந்தத் துறைகளை விட்டு ஓடியுள்ளார்கள்.


ஆனால் ஒன்று நேற்று சம்பவம் நடந்து ஒரு மணிநேரத்துக்குள் நாம் அலுவலகம் அடைந்தபோது நானே எதிர்பாராமல் பெண்களும் உட்பட அதிகளவான எங்கள் ஊழியர்கள் கவலையுடனும்,அதிர்ச்சியுடனும் அங்கே நின்றிருந்தார்கள்.


சம்பவம் நடக்கும் நேரத்தில் அழைத்தும் தமிழ் சினிமா போலீசார் மாதிரியே நம் காவல்துறையினரும்,தீயணைப்புப் படைவீரரும் வந்து சேர்ந்தார்கள் என்பதும் முக்கியமான விஷயம்.


அதற்குள் இங்கேயிருந்த காயமடைந்த மூவரும் இன்னும் மூவரும் சளைக்காமல் தீயணைக்கப் போராடி இருந்தார்கள். அந்தக் கடமையுணர்ச்சிக்குப் பாராட்டுக்கள்.  


இன்று அலுவலகம் வரும்போது எரிந்த எச்ச சொச்சங்களை வெளியே எடுத்து அகற்றிக் கொண்டிருந்தார்கள்..
அழிப்பது இலகு.. ஆனால் மீண்டும் ஆக்குவது?

இப்போது வரை தங்கள் ஆறுதல் தகவல்களாலும்,அன்பாலும்,தாங்களும் இருக்கிறோம் என்று அன்பை வெளிக்காட்டுவதாலும் துணை வருகின்ற அத்தனை நண்பர்கள்,நேயர்கள்,சகல ஊடகவியலாளருக்கும் நன்றிகள்.

நாங்கள் மீண்டும் வருவோம்.
வழி மாறாது,வாக்கு மாறாது இதே நேர் நடுநிலை வழியில் தொடர்வோம்.


மேலேயுள்ள புகைப்படங்கள் யாவும் எனது செல்பேசியினால் எடுக்கப்பட்டவை.
இவற்றுள் பல உலகெங்கும் உள்ள இணையத்தளங்கள்,பத்திரிகைகளில் இன்றும் நேற்றும் வெளியாகியுள்ளன.


நம்ம உதவி முகாமையாளரும்,சம்பவ இடத்துக்கு எனக்கு முன்னதாக விரைந்தவருமான ஹிஷாம் தனது அனுபவத்தைப் படங்களுடன் தந்துள்ளார்.
ஹிஷாமின் பதிவு..

எரிந்தது வெற்றி FM இன் செய்திப்பிரிவு




மேலும் சில முக்கிய விஷயங்கள் -
இது ஒரு முக்கிய பலமுள்ள ஒருவருடைய நிறுவனம் என்றார்கள் ஆரம்பத்தில்.பின்னர் அவருக்கும் பங்குகள் உள்ளது என்றார்கள்.


என்னைக் கைது செய்தபோது முதலில் மூக்குடைந்தது அவர்களுக்கு.
நேற்றுடன் மீண்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
புரிந்துகொள்ளுங்கள்.


இந்த நிலை இனியும் எந்தவொரு ஊடகத்துக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.
வெற்றிக்கு நடந்ததே இறுதியாகட்டும்.


21 Responses to "வெற்றி FM தாக்குதல் - இன்னும் சில..."

  • கன்கொன் || Kangon

    காயமடைந்தவர்கள் வீடு திரும்பியுள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.
    வெற்றி நேயர்களின் அன்பு அவர்களுக்கு எப்போதும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    திரும்பத் திரும்ப இப்படியான சம்பவங்கள் நடப்பது கவலையையும், எரிச்சலையும் தந்திருக்கிறது. :(
    என்று எல்லாம் மாறுமோ... :(


    // ஆனால் அண்மையில் எமது வெற்றி குழுவில் இணைந்துகொண்ட புதிய அறிவிப்பாளர் சீலன் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. //

    விரைவாக வழமையான இயல்பான வாழ்வுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறேன்.


    // மேலும் சில முக்கிய விஷயங்கள் //

    ம். ம். ம்....

    மிகவிரைவில் வெற்றி மீள அதே வேகத்துடன் வரட்டும்.

  • S.Sudharshan

    என்னசெய்வது ஆறுதல் தெரிவிப்பதை தவிர .. ஆனால் ஒன்று மட்டும் உண்மை .. எம்மால் பயனடைந்தவர்கள் பின்னர் எம்மை காக்க கூட வரமாட்டார்கள் என்பது உண்மை . இதற்க்கு ஒரு குருவி கூட எதிர்ப்பை காட்டாது(நேயர்களின் வாயால் தெரிவிக்கும் எதிர்ப்பை தவிர ) . நாம் மட்டும் இப்படி சுயநலவாதிகள் என்ன செய்வது . வாழ்க இலங்கையின் ஊடக சுதந்திரம் . உண்மையை நடுநிலை தவறாது செய்தியை வழங்குவதால் தான் அடித்தோம் என்று சொல்லி விட்டாவது அடித்திருக்கலாம் . கடுமையான கண்டனங்கள் (எந்தவித பிரயோசனமும் இல்லாத வெறும் வாய் கண்டனத்தை நானும் தெருவிக்கிறேன் )

  • நான் தமிழன்

    அண்ணா ஒரு வேலை நம் வளர்ச்சி பிடிக்காதவர்கள் செய்த வேலையாக கூட இருக்கலாம். இப்போதெல்லாம் காசு கொடுத்தால் எதையும் செய்யும் மனிதர்கள் நம் நாட்டில் அதிகம் உள்ளார்கள். எது எப்படியிருந்தாலும் இலங்கை, ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த நாடக மாறியிருப்பது வருத்தமளிக்கிறது.
    இனிமேல் மிகுந்த அவதானத்துடன் இருங்கள். போதிய பாதுகாப்புகளை ஏற்படுத்துங்கள்.
    வெற்றி வானொலி மீண்டு வந்து வெற்றி மேல் வெற்றிகள் படைக்க வாழ்த்துக்கள்.
    நாம் என்றும் உங்களுடனே.

  • அஸ்பர்-eseak

    ஆறுதல்களை கேட்டு அண்ணாக்கு அலுத்துப் போயிருக்கும் என்று நினைக்கிறேன். இப்படியான தாக்குதல் நம்ம நாட்டில் மட்டும் தானா நடக்குது இல்ல எல்லா இடங்கள்ளயௌம் இப்பிடியா?

    அந்த back ups அ அங்கேயே போட்டு பூட்டி வெச்சவர்ர தலையில் ஓங்கி குட்டு ஒண்டு போடுங்க அண்ணா

  • Anuthinan S

    அண்ணா வெற்றிக்கு வெற்றிகள் கிடைக்கும் போது இது ஒரு திருஷ்டி கழிந்ததாக நினைத்து மீண்டும்

    //நாங்கள் மீண்டும் வருவோம்.
    வழி மாறாது,வாக்கு மாறாது இதே நேர் நடுநிலை வழியில் தொடர்வோம்.//

    தொடருங்கள் உண்மை ரசிகர்கள் உங்களுடன் இருப்பார்கள் !!!

    //எமது வெற்றி குழுவில் இணைந்துகொண்ட புதிய அறிவிப்பாளர் சீலன் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.//

    விரைவில் மீண்டு தனது திறமையை அவர் நிருபிக்க எனது வாழ்த்துக்கள்!!!

    //யார் இவர்கள்? ஏன் செய்தார்கள்?
    நாம் பகையை எவ்விதமாகவும் தேடிக் கொண்டதுமில்லை.
    பகைவர் யாரும் எமக்கு இல்லை//

    பகைவர்கள் உருவாக்கபட்டிருக்கலாம்!!

  • யோ வொய்ஸ் (யோகா)

    காலையில் வெற்றியோடு முழிக்கும் எனக்கு இது கவலையான செய்திதான் லோஷன்,

    கவலை வேண்டாம், காய்ந்த மரமே கல்லடி படும்.

    சீலன் இயல்புக்கு வர பிரார்த்திக்கிறேன்.

    ////மிகவிரைவில் வெற்றி மீள அதே வேகத்துடன் வரட்டும். ////

    வழிமொழிகிறேன்

  • Subankan

    காயங்களுடனும் பொருட்சேதங்களுடனுமாவது முடிந்ததே. எங்களால் முடிந்ததெல்லாம் வெற்றிக்கு ஆதரவையும், அவர்களுக்கு எதிர்ப்பையும் தெரிவிப்பதுதான்.

    ////மிகவிரைவில் வெற்றி மீள அதே வேகத்துடன் வரட்டும். ////

    அதே!

  • Riyas

    மிக கவலையான செய்தி அண்ணா..

    மிகவிரைவில் வெற்றி மீள அதே வேகத்துடன் வரட்டும்...வரும்

  • !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

    ஒருவரின் வெற்றியை இது போன்ற தாக்குதல்களால் தாமதப் படுத்த இயலுமே தவிர தடுத்துவிட இயலாது . விரைவில் வெற்றி மீண்டும் பழைய நிலையில் செயல்படும் என்ற எதிர்பார்புடன் காத்திருக்கிறேன் . நண்பரே பதிவில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் தலை காட்டுகிறது சரி செய்யவும் . பகிர்வுக்கு நன்றி

  • டம்பி மேவீ

    கவலை படாதீங்க...மீண்டும் பழைய மாதிரி இயங்க தான் போறீங்க ..அதுவும் சீக்கிரத்துல....

    பிறகு மத்தவங்க எல்லாம் எப்புடி இருக்காங்க ??? அதிர்ச்சி ல இருந்து வெளிய வந்துடங்களா???

    எதுக்கும் நீங்களும் மத்தவங்களும் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துகோங்க.

    ஒரு பழமொழி சொல்லுவாங்க ...பிறரால் சோதனைகள், கஷ்ட காலங்கள் வரும் போது : நாம் சரியான வழியில் போகிறோம்ன்னு தெரியுமாம். நம்முடைய வளர்ச்சியின் தீவிரம் நமக்கே தெரியும்.

    "மிகவிரைவில் வெற்றி மீள அதே வேகத்துடன் வரட்டும்."

    வரட்டும்ன்னெல்லாம் இல்ல ...கட்டாயம் வந்தாகணும்.....

  • Balavasakan

    எப்போதும் நல்லவர்களுக்கு சோதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் அண்ணா இவற்றில் எல்லாம் இருந்து மீண்டு பட்டை தீட்டப்பட்ட வைரமாக வெற்றி ஜொலிக்க வாழ்த்துக்கள்..!!!

  • Anonymous

    இவர்களை திருத்த முடியாது. சிறிலங்காவில் ஊடகவியளார் என இருப்பவர்கள் உண்மையாகவே உயிருக்கு உத்தரவாதம் இல்லாதவர்கள் .என்னதான் நடக்குது நடக்கடுமே இருட்டினில் நீதி மறையட்டுமே .தன்னாலே வெளிவரும் தயங்காதே ..............., நான் நினைக்கிறேன் ஸ்ரீலங்கா ஊடக சுதந்திரம் என்பது இல்லாத ஒரு நாடு .ம்ம் என்ன செய்வது எல்லாம் எம் விதி .

  • Ahamed Suhail

    மீண்டும் வருக...
    வெற்றி பெற வருக...
    நேயர்களை மகிழ்விக்க வருக...
    தைரியமாக வருக....
    வருக வருக....

  • அத்விகா

    "நாங்கள் மீண்டும் வருவோம்.
    வழி மாறாது,வாக்கு மாறாது இதே நேர் நடுநிலை வழியில் தொடர்வோம்"

    இந்த துவளாத வார்த்தகளே போதும்..
    சரியான சாட்டை அடி இதுவொன்று தான்..

  • Cool Boy கிருத்திகன்.

    மின்சாரக்கம்பிகள் மீதும் மைனாக்கள் கூடு கட்டும்..

    நமோ நமோ நமோ நமோ மாதா...
    அப்பி ஸ்ரீலங்கா..

  • archchana

    மிக கவலையான செய்தி .
    தன்னை தான் தற் காத்து கொள்வதுதான் இன்றைய நாட்களில் சிறந்தது

  • Vijayakanth

    maram kaaikka aarambichchirukku.. athuthan ippadi kalladi paduthu..don't worry....we are with vetri

  • அஜுவத்

    naam ithai vida pallayiram madangu palthudan meendu varuvom; unmai sathiyam enrum jeikkum. aanal ippo konjam unmaikkum sathiyathukkum kaalam konjam sari yillai polirukkirathu; nichayam meendu varuvom.........

  • SASee

    இப்படியான ஊடத்தூறை மீதான வன்முறைகள் இதுவல்லவே அண்ணா முதல் முறை........!!! எத்தனையோ தடவைகள் நடந்தும் தொடர்ந்தும் யார் கண்டுகொண்டார்கள்...? யாரிடம் போய் முறையிடுவது.......?!?!?! :-(

    இறைவன் ஒருவன் மட்டுமே மன(தில்) நம்பிக்கை தருவதினூடாக உதவிக்கரம் நீட்டமுடியும்...!

    நிச்சயமாக...!
    நிச்சயமாக இனி ஒரு விதி செய்ய வெற்றி கிட்டும் அண்ணா...!!!
    நம்பிக்கையுடன் உங்கள் பயணத்தில் அடுத்த அடியை வையுங்கள் அண்ணா....!

  • SShathiesh-சதீஷ்.

    காயத்த மரம் தான் கல்லடி படும். வெற்றி மீண்டு வரும் அந்த நம்பிக்கை எனக்கும் உண்டு. ஊடக சுதந்திரம் இதை பற்றி நாம் பேசித்தான் என்ன பலன்

  • கானா பிரபா

    படங்களையும் செய்தியையும் வாசிக்கும் போது வலிக்கிறது


Post a Comment

Related Posts with Thumbnails

சொடுக்கி இணைக்க...



Creative Commons License
LOSHAN - லோஷன் by A.R.V.Loshan is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.