அங்காடித் தெரு - என் பார்வை

3/31/2010 05:36:00 PM

(35) Comments



அங்காடித் தெரு பற்றிய என் பதிவுக்குள் செல்ல முன் திரைப்பட ரசிகர்களே, தயவுசெய்து இப்படியான நல்ல திரைப்படங்களை நம் எல்லோரும் சேர்ந்து ஊக்கம் வழங்கி வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன்.


இல்லாவிடின் தரமான,புதிய முயற்சிகளைத் தருகின்ற படைப்பாளிகள் ஊக்கமிழந்து விடுவர்.


'வெயில்' மூலம் ஆச்சரியபடுத்தி, உருகவைத்த வசந்தபாலனின் மூன்றாவது  படைப்பு.(அல்பம் தான் முதல் படம் 2003- ஞாபகப் படுத்தியமைக்கு நன்றிDream girl) 


வெயிலில் மனித மனங்களின் சலனங்கள்,பாசம்,உறவுக் கட்டமைப்பின் உணர்ச்சிகளைக் காட்டிய வசந்தபாலன், 'அங்காடித் தெரு'வில் எங்களுக்குள்ளே இருந்து கதாமாந்தரை எடுத்து, வாழ்க்கையில் தினமும் நாம் சந்திக்கின்ற ஆனால் கவனிக்கத் தவறுகிற சில மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.




 பெரு நகரங்களின் பல்பொருள் அங்காடிகள்,பெரிய ஆடையகங்கள் இன்னும் தொழிற்சாலைகளில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கொத்தடிமைகளாக கிடந்தது தம் குடும்பங்களுக்காக உழலும் எத்தனையோ இளைய சமுதாயத்தினர் பற்றி எம்முள் எத்தனை பேருக்குத் தெரியும்?


 கிராமத்திலிருந்து பசுமையான உலகம் காணப் பட்டணம் புறப்பட்டு வந்து படும்பாடுகளை செய்ரகியாக அல்லாமல் படு யதார்த்தமாக சொல்வதே அங்காடித் தெரு.
அடிக்கடி இந்தியா செல்லும் எனக்கு இனி ரங்கநாதன் தெருப் பக்கம் ஷொப்பிங் செல்லும் போதெல்லாம் கடை ஊழியர்கள்,சிப்பம்ந்திகளைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவிதப் பரிதாப உணர்வு ஏற்படுவது நிச்சயம்.


இறுதியாக கடந்தவருடம் போயிருந்தபோதும் கூட, அந்தத் தெருவின் நெரிசலில் பலவித முகங்களை,பலவித தொழில் செய்வோரைப் பார்த்தபோது அவர்களின் வாழ்க்கைக் கதைகள் எத்தனைவிதமாக இருக்கும் என தற்செயலாக யோசித்தது இப்போது மனதுக்குள் மீள ஓடுகிறது.  


இயல்பு மாறாமல்,எளிமையாக, யதார்த்த வாழ்க்கையில் இப்படியும் எங்களை சுற்றி நடக்கின்றன என்று முகத்தில் அறையும் கதை.


புதுமுகம் மகேஷ் கதாநாயகன். கிராமங்களில் நாம் காணும் திறமையான,ஆனால் உயர்கல்வி கற்க முடியாத குடும்ப சூழ்நிலையில் வாடும் இளைஞனாக அச்சொட்டாகப் பொருந்துகிறார்.
வெகு இயல்பான நடிப்பு.துடிப்பான வெகுளியான ஒரு அச்சு அசல் கிராமத்து இளைஞன்.  


கதாநாயகி அஞ்சலி- கற்றது தமிழில் பார்த்த அந்தப் பிஞ்சு முகத்தில் இந்தப்படத்தில் தான் எத்தனை முகபாவங்கள்?
அஞ்சலி தான் அங்காடித் தெருவின் அச்சாணி. 
கனி என்ற இவர் பாத்திரப் பெயர் மனதிலே ஒட்டிக்கொண்டு விட்டது.
கண்களும் உதடுகளும் உணர்ச்சிகளைக் காட்டும் விதம் அபாரம்.இயக்குனர்கள் பொருத்தமான பாத்திரங்களை இவருக்கு வழங்கும் பட்சத்தில் தமிழில் இன்னொரு சிறந்த நடிகையை நாம் காணலாம்.


கதாநாயகனின் நண்பனாகப் படம் முழுவதும் வரும் முக்கிய பாத்திரம் கனாக் காணும் காலங்கள் - விஜய் டிவி புகழ் பாண்டிக்கு.
சிரிக்கவைக்கும் பல காட்சிகளில் அசத்துகிறார். அப்பாவியான தோற்றத்துடன் பல இடங்களில் குணச்சித்திர நடிப்பையும் காட்டுகிறார்.


கடையின் மேற்பார்வையாளராக கருங்காலி என்ற பட்டப் பெயரோடு வில்லனாக வரும் பாத்திரம் பிரபல இயக்குனர் வெங்கடேஷுக்கு.கடையில் வேலை செய்யும் அப்பாவி பையன்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமல்லாமல் பார்க்கும் எங்களுக்கும் எரிச்சல் தரும் பாத்திரத்தில் மனிதர் அசத்துகிறார்.
சில காட்சிகளில் நேரில் கண்டால் கொலை செய்யும் அளவுக்கு கோபமும் வருகிறது.
பேசாமல் சரத்குமார்,சிம்பு,அர்ஜுன் இவர்களை வைத்துக் கொலைவெறி,மொக்கை,மசாலாக்களை எடுப்பதை விட்டுவிட்டு (அடுத்தபடம் மாஞ்சாவேலுவாம்..கடவுளே) வில்லனாகவே வெங்கடேஷ் நடித்தால் எமக்கும் நல்லது;அவருக்கும் நல்லது.


அது சரி சினேகாவுக்கு என்னாச்சு? பாவம்.. இப்போதெல்லாம் இப்படி துண்டு,துக்கடா பாத்திரங்கள் தான்.. 
ஆனால் அவர் வரும் இடமென்னவோ ரசிக்கலாம்.. முக்கியமாகப் பாண்டியினதும்,கடை முதலாளியினதும் குசும்புகள்.


படத்தின் அநேகமான பாத்திரங்கள் புதியவர்களாகவே இருப்பதால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு தோன்றாமல் வாழ்க்கையில் நடப்பவற்றை நாம் நேரே பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.


அந்தந்த தொழில் செய்வோரை அப்படியே பயன்படுத்தினாரா வசந்தபாலன்?


அவ்வளவு நேர்த்தி,இயல்பு,மிகைபடா நடிப்பு.


சிறு சிறு பாத்திரங்களும் மிகக் கவனமாகத் தேர்வு செய்யப்பட்டுக் கையாளப் பட்டிருப்பதும், அவர்கள் படத்தின் முக்கிய கட்டங்களைத் தீர்மானிப்பதும் அருமை.
தற்கொலை செய்துகொள்ளும் பெண்,அவளது கோழைத்தனமான காதலன், வீதியோரத்தில் வியாபாரம் செய்யும் விழிப்புலனற்ற முதியவர்,கழிவறையை தன் வியாபார முதலீடாக்கும் இளைஞன், வீதியோரக் குள்ள மனிதர், அவரின் விபசார மனைவி, ஆறுதல் சொல்லும் இஸ்லாமியப் பெரியவர், கதாநாயகனினதும் கதாநாயகியினதும் தங்கைமார், முதல் காதலி அஷ்வினி (வாயுக் கோளாற்றால் காதல் பிரிந்த முதல் சரித்திரம்) என்று மனதில் நிற்கிறார்கள்.


இவர்களோடு இடங்களும் படத்தில் முக்கியமாகின்றன.
பனி புரியும் அங்காடி,அந்தத் தெரு, ஆண்களும் பெண்களும் தங்கும் இடங்கள்,சாப்பிடும் மெஸ் .. இவற்றைக் காட்டியிருக்கும் படு யதார்த்தம் வசனங்களால் கூட ஏற்படுத்த முடியாத தாக்கத்தைத் தருகிறது.  


வசனம் ஜெயமோகன். தனது மேதாவித்தனத்தையோ,புலமையையோ காட்டாமல் இந்தையல்பான படத்துக்கு எப்படி வசனங்கள் தேவையோ அளந்து அழகாகத் தந்திருக்கிறார்.
சின்ன சின்ன வசனங்களில் மனதின் மெல்லிய இடங்களைத் தொட்டுவிடுகிறார்.பாராட்டுக்கள்.
வசனகர்த்தா என்றால் இப்படித் தான் இருக்கவேண்டும்.


அவரது மீதிப் பணியை நேர்த்தியாக செய்கிறது ரிச்சர்ட் மரிய நாதனின் கமெரா.
குலுக்காமல் கண்களை அலுக்க விடாமல் இயற்கை வெளிச்சத்துடன் நேர்த்தியான கோணங்களில் காட்சிகளைத் தந்துள்ளார்.
கடைக் காட்சிகளும், வீதியைப் படம் பிடித்திருக்கும் விதமும் எம்மையும் உள்ளே இருப்பவர்களாக எண்ண வைக்கிறது.
மேலதிக வெளிச்சமின்றி தங்குமிடக் காட்சிகளில் அவர்கள் படும் துன்பங்களையும் அந்த இடங்களின் இட நெருக்கடியையும் அவலத்தையும் நுட்பமாகக் கமெரா பதிவு செய்கிறது.
பாடல் காட்சிகளிலும் இயல்பை மீறாத இயக்குனர்,ஒளிப்பதிவாளரை பாராட்டலாம்.


பாடல்கள் எல்லாவற்றிலும் (யானைக்காது தவிர) ஒரு மென் சோகம் இழையோடுகிறது.
இரு பாடல்கள் விஜய் அண்டனியின் இசையிலும், நான்கு பாடல்கள் ஜி.வீ.பிரகாஷின் இசையிலும் இனிக்கின்றன.


கண்ணில் தெரியும் வானம், மைக்கேல் ஜாக்சன்,ரஹ்மானின் இசையில் கலவை. 
ஆனால் காட்சிகளின் சோகமும், வரிகளின் ஆழமும் கண்கலங்க வைக்கின்றன.
அவள் அப்படியொன்றும் அழகில்லை சுவாரஸ்யம்.. சிரிக்கவும் வைக்கிறது.
உன் பேரை சொன்னாலே - சினிமா நட்சத்திரங்களாக தம்மை எண்ணி ஆடும் அந்த அப்பாவிகளின் உணர்வைத் தொனிக்கவிடுகிறது.ரசிக்கலாம்.


பாடல்களின் இடையூறு படத்தைப் பெரிதாகத் தொய்யவிடாது இருப்பதற்கு கதை ஓட்டம் ஒரு காரணமாக இருக்கலாம்.


எனினும் பின்னணி இசையில் விஜய் அன்டனி சொதப்பி இருக்கிறார். இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். அங்காடித் தெருவை இன்னும் அது மெருகேற்றி இருக்கும்.




படத்தின் ஆரம்பத்திலேயே இந்தப் படக் கதையோ, சம்பவங்களோ, பாத்திரங்களோ யாரையும் குறிப்பிடுவன அல்ல.. என்ற வழமையான வசனங்கள்.. ஆனால் அடிக்கடி காட்டப்படும் சில காட்சிகள்,சீருடைகள், பின்னணியில் இடையிடையே வேண்டுமென்று காட்டப்படும் இன்னொரு பிரபல ஆடையகம்/பல்பொருள் அங்காடி, ஸ்னேஹாவின் சேலை விளம்பரம், செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் என்ற பெயர், முதலாளியாக வருபவரின் நடை,உடை,பாவனைகள் என்று பல விஷயங்கள் எங்கேயோ,யாரையோ சாடை மாடையாக அடிப்பது போலிருக்கே.. 
(சென்னைவாசிகள் தான் உண்மை சொல்லவேண்டும்)


இவ்வளவு இயல்பான ஒரு துன்பியல் கோர்வைக்கிடையிலும் இடையிடையே இயல்பான, படத்தின் பாதையை விட்டு விலகாத நகைச்சுவைகளையும் லாவகமாகப் புகுத்தியது இயக்குனரின் திறமை தான்.


பல காட்சிகளில் கண் கலங்கி விட்டேன்.


மேற்பார்வையாளரின் பாலியல் கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு குடும்பத்துக்காக உழைக்கும் நாயகி ஒரு கட்டத்தில் பொங்கி வெடிப்பது, வேலை போய்விடும் என்ற அச்சத்தில் காதலன் கோழையாவது கண்டு மனம் வெதும்பி காதலி தற்கொலை செய்துகொள்ளும் அந்த இடம் (என்ன ஒரு உருக்கமான நடிப்பு - அந்தப் பெண் பாராட்டுக்குரியவள்) - அந்தக் கோழைப் பயல் மீது கொலை வெறியே வந்தது,வயதுக்கு வந்த தங்கை இருக்கும் நாய்க் கூடு, அவளுக்கு சடங்கு செய்ய முடியாத இயலாநிலைக்கு வருந்துவது, கடைசிக் காட்சிகளில் தொனிக்கும் இயலாமை,அன்பின் வெளிப்பாடு,பரிதாபம் என்று எதைத் தான் விடுவது?


குருவிகள் இரண்டின் தலையில் பனங்காயை அல்ல பலாப்பழத்தை வைத்து த்நிச்சலாக அந்த இனிய பழத்தை எங்களுக்கு கனியக் கனிய தந்திருக்கும் இயக்குனரின் துணிச்சல்+திறமைக்கு வாழ்த்துக்கள்.


பல காட்சிகளில் முக்கியமாக தானாகத் தொழில் தேடும் இளைஞன், இறுதிக் காட்சி என்று இயக்குனர் இளைஞர்களுக்கு நம்பிக்கை விதைகளை ஊன்றவும் தவறவில்லை. அதற்கும் வாழ்த்துக்கள்.


இயக்குனர் வசந்தபாலன் மீண்டும் ஜெயித்துள்ளார்.ஈரமுள்ள இதயங்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள்.
பலர் திருந்துவதற்கும் இடமுள்ளது.


இயக்குனர் இந்தப் படத்தை எடுப்பதற்கு ரங்கநாதன் தெரு, சென்னையின் ஷாப்பிங் தலை நகர் T நகரில் எத்தனை நாள் தன உதவி இயக்குனர்களோடு தகவல் திரட்டில் ஈடுபட்டிருந்தாரோ .. அசத்தல். விளம்பரப் படம் முதல் வியாபார யுக்தி வரை அத்தனை விஷயங்களையும் விலாவாரியாகத் தந்துள்ளார்.


இப்படியான நல்ல படங்களை வெற்றி பெற வைக்காவிட்டால் தொடர்ந்தும் தமிழ்படம் சாட்டையடி கொடுத்த அதே சகதிக்குள் கிடந்தது உழலும் சாபக்கேட்டுக்குள் அகப்படவேண்டியது தான்.




35 Responses to "அங்காடித் தெரு - என் பார்வை"

  • கன்கொன் || Kangon

    வருகையைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுகிறேன்...

    படம் பற்றி நல்ல மாதிரியாக விமர்சனங்கள் வருவதால் விரைவில் பார்க்க திட்டமிருக்கிறேன்...

    பார்த்துவிட்டு வாசித்துக் கொள்கிறேன்.... :)

    என்றாலும்
    //இப்படியான நல்ல படங்களை வெற்றி பெற வைக்காவிட்டால் தொடர்ந்தும் தமிழ்படம் சாட்டையடி கொடுத்த அதே சகதிக்குள் கிடந்தது உழலும் சாபக்கேட்டுக்குள் அகப்படவேண்டியது தான்.//

    இதை மட்டும் வாசித்தேன்....

  • மாதேவி

    நல்ல விமர்சனம்.

    படம் பார்க்க எண்ணியிருந்தேன். இன்னும் முடியவில்லை.விரைவில் பார்க்கிறேன்.

  • EKSAAR

    //பெரு நகரங்களின் பல்பொருள் அங்காடிகள்,பெரிய ஆடையகங்கள் இன்னும் தொழிற்சாலைகளில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கொத்தடிமைகளாக கிடந்தது தம் குடும்பங்களுக்காக உழலும் எத்தனையோ இளைய சமுதாயத்தினர் பற்றி எம்முள் எத்தனை பேருக்குத் தெரியும்?//

    ஒரு சிலருக்குதான் தெரியாமல் இருக்கும். ஏன் என்றால் இதெல்லாம் நாங்கள் தான். இவ்வாறான சுரண்டல்களுக்கு ஒவ்வொரு நாளும் நாம் எல்லோரும் முகம்கொடுக்கிறேம். களம் வேறாக இருக்கலாம். நிலவரம் ஒன்றுதான். (நாங்கள் எல்லாம் உங்களைபோல் luxury ஆக வாழ்கிறோம் என்றா நினைத்து கொண்டிருக்கிறீர்கள்? அரசியல்வாதியா நீங்கள்?)

    //அடிக்கடி இந்தியா செல்லும் எனக்கு //

    பெரும கப்பல்

  • Subankan

    அடடா, நல்ல படங்கள் மட்டும் உடனடியாகப் பார்க்கக் கிடைக்குதில்லையே

    //இப்படியான நல்ல படங்களை வெற்றி பெற வைக்காவிட்டால் தொடர்ந்தும் தமிழ்படம் சாட்டையடி கொடுத்த அதே சகதிக்குள் கிடந்தது உழலும் சாபக்கேட்டுக்குள் அகப்படவேண்டியது தான்.//

    ம்...

  • Anonymous

    கன்கொன் || Kangon said...
    //படம் பற்றி நல்ல மாதிரியாக விமர்சனங்கள் வருவதால் விரைவில் பார்க்க திட்டமிருக்கிறேன்... பார்த்துவிட்டு வாசித்துக் கொள்கிறேன்.... :)//

    அந்த நல்ல மாதிரியான விமர்சனங்களை படிக்கலையா? :D

    //இதை மட்டும் வாசித்தேன்...//

    :D :D முடியல

  • rajasundararajan

    //சிறு சிறு பாத்திரங்களும் மிகக் கவனமாகத் தேர்வு செய்யப்பட்டுக் கையாளப் பட்டிருப்பதும், அவர்கள் படத்தின் முக்கிய கட்டங்களைத் தீர்மானிப்பதும் அருமை.//

    உங்கள் கனிப்புகளும் நல்லெண்ணமும் கூட அருமை.

  • மாறன்

    me too.

  • கன்கொன் || Kangon

    //அந்த நல்ல மாதிரியான விமர்சனங்களை படிக்கலையா? :D //

    ஆகா...
    தேடி வந்து தாக்குறானுகளே....

    ஐயா! நல்ல விமர்சனம் எண்டது ஒருவரியில் சொல்பவற்றைத்தான்.
    ருவிற்றரில் 'அங்காடித் தெரு அருமை' என்று நிறையப் பேர் சொன்னதால் தான் அப்படிச் சொன்னேன்...

    எப்பிடி ஐயா தாக்குறதுக்கு என்னத் தேர்தெடுக்கிறீங்க?
    அவ்வ்வ்வ்வ்....

  • வந்தியத்தேவன்

    ஆறுதலாக பார்க்கவேண்டும். அதுசரி யாரப்பா அந்த ட்ரீம் கேர்ள்? :-)

  • நிந்தவூர் ஷிப்லி

    அடிமட்ட மக்களின் உணர்வகளையும் காதலையும் உணர்வபூர்வமாக வடித்துச்செதுக்கியிருக்கிறார்கள்.புதுமுகம் மகேஷை விட கற்றது தமிழ் அஞ்சலி நடிப்பில் பிய்த்து உதறுகிறார்.அவரது முகபாவங்கள் பிரமிப்பூட்டுகின்றன.]

    வறுமையில் உழலும் சராசரிக்கும் குறைவான இளைஞர்களின் வாழ்வு படம் பார்ப்பவர்களை சில நாட்களேனும் உலுக்கி எடுக்கும்.
    படத்தில் பாண்டியின் நகைச்சுவைகள் ரசிக்க வைக்கின்றன.அவரது காதலிக்காக அவர் கவிதை எழுத துடிப்படும் கடவுள் வாழ்த்தை கவிதையாக மாற்றுவதும் செம ஜாலி.
    படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள் இருந்தும் பின்னணி இசை ஒத்துழைக்கவில்லை.பாடல்கள் அத்தனையும் அற்புதம்.நா.முத்துக்குமாரின் வரிகளில் எல்லாப்பாடல்களுமோ உணர்வுபூர்வமானவை."பூமியின் மடியில் ஏழைகள் ஜனனம்"இறைவன் படைப்பில் பிழையில்லயா?"என்கிற அவரது கேள்விக்கு விடைதான் இன்னும் கிடைத்தபாடில்லை.
    படத்தில் ரசிக்க வைப்பவை

    மகேஸ்
    அஞ்சலியின் நடிப்பு
    கருங்காலி
    பாண்டி
    பாடல்கள்
    ஒளிப்பதிவு
    வசனம்
    இயக்கம்

    படத்தில் உறுத்த வைப்பவை

    சந்று இழுவையான உணர்ச்சிக்கோப்பு
    நாடகத்தனம்
    பின்னணி இசை

    மொத்தத்தில் தமிழ் சினிமாவுக்கு தான் ஒரு வசந்தமயமான இயக்குநர் "வசந்தபாலன்"என்று நிரூபித்திருக்கிறார.அய்யா..உங்க கிட்ட இருந்து இன்னும் நிறய எதிர்பார்க்கிறோம்..

  • யோ வொய்ஸ் (யோகா)

    பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன், உங்கள் பதிவு பார்த்ததும் கட்டாயம் இவ்வார இறுதியில் பார்ப்பது என முடிவு செய்து விட்டேன்.

  • shabi

    'வெயில்' மூலம் ஆச்சரியபடுத்தி, உருகவைத்த வசந்தபாலனின் இரண்டாவது படைப்பு.////ITHU இவரின் 3 படம் .First பட்ம் ஆல்பம்

  • Sabarinathan Arthanari

    நல்ல விமர்சனம்
    நன்றி

  • அனுதினன்

    இதுவரை படத்தை பார்க்க வில்லை அண்ணா!!!

    உங்கள் விமர்சனம் நன்றாக இருப்பதாலும் , தமிழ் சினிமாவை காப்பாற்றும் எண்ணம் இருப்பதாலும் படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன்

  • LOSHAN

    கன்கொன் || Kangon said...
    வருகையைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுகிறேன்...//

    உங்களைப்போல ஒரு நல்ல ஜனநாயகவாதி கிடைப்பது ரொம்பவும் அரிது.. ;)



    படம் பற்றி நல்ல மாதிரியாக விமர்சனங்கள் வருவதால் விரைவில் பார்க்க திட்டமிருக்கிறேன்...//

    இதுவும் ஐந்தாண்டு காலத் திட்டமா? நல்ல படங்களை எல்லாம் விரைவில் தொக்கிடுவாங்க. விரைவில் பாருங்கோ..



    பார்த்துவிட்டு வாசித்துக் கொள்கிறேன்.... :)//

    26 இல் ஒன்று? ;)

    என்றாலும்
    //இப்படியான நல்ல படங்களை வெற்றி பெற வைக்காவிட்டால் தொடர்ந்தும் தமிழ்படம் சாட்டையடி கொடுத்த அதே சகதிக்குள் கிடந்தது உழலும் சாபக்கேட்டுக்குள் அகப்படவேண்டியது தான்.//

    இதை மட்டும் வாசித்தேன்....//

    கடைசி வரி? ம்ம்ம்

  • LOSHAN

    மாதேவி said...
    நல்ல விமர்சனம்.//

    நன்றி :)

    படம் பார்க்க எண்ணியிருந்தேன். இன்னும் முடியவில்லை.விரைவில் பார்க்கிறேன்.//

    நிச்சயம் பாருங்கள்.விரைவில் பாருங்கள்

  • LOSHAN

    EKSAAR said...
    //பெரு நகரங்களின் பல்பொருள் அங்காடிகள்,பெரிய ஆடையகங்கள் இன்னும் தொழிற்சாலைகளில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கொத்தடிமைகளாக கிடந்தது தம் குடும்பங்களுக்காக உழலும் எத்தனையோ இளைய சமுதாயத்தினர் பற்றி எம்முள் எத்தனை பேருக்குத் தெரியும்?//

    ஒரு சிலருக்குதான் தெரியாமல் இருக்கும். ஏன் என்றால் இதெல்லாம் நாங்கள் தான். இவ்வாறான சுரண்டல்களுக்கு ஒவ்வொரு நாளும் நாம் எல்லோரும் முகம்கொடுக்கிறேம். களம் வேறாக இருக்கலாம். நிலவரம் ஒன்றுதான். (நாங்கள் எல்லாம் உங்களைபோல் luxury ஆக வாழ்கிறோம் என்றா நினைத்து கொண்டிருக்கிறீர்கள்? அரசியல்வாதியா நீங்கள்?)//

    இதென்ன வேடிக்கை?

    இலங்கையில் உள்ள பெரும் சங்கிலித் தொடர் ஆடையகங்கள்,பல் பொருள் அங்காடிகளில் பனி புரியும் பலரை எனக்குத் தெரியும்.இங்கே யாரும் அப்படிக் கொத்தடிமை வாழ்வு வாழ்வதாக நான் அறியேன்.என்னையும் விடத் தாங்கள் luxury வாழ்வு வாழ்கிறீர்களோ நான் அறியேன்.. ;)



    அரசியல்வாதியா நீங்கள்?//

    இதுவரை இல்லை. ;)



    //அடிக்கடி இந்தியா செல்லும் எனக்கு //

    பெரும கப்பல்//

    சாரி.. விமானத்தில் தான் செல்வதுண்டு.. ;)

  • LOSHAN

    Subankan said...
    அடடா, நல்ல படங்கள் மட்டும் உடனடியாகப் பார்க்கக் கிடைக்குதில்லையே//

    ஏன்? ஏன்? ஏன்? பிசி?



    =======================
    Anonymous said...
    கன்கொன் || Kangon said...
    //படம் பற்றி நல்ல மாதிரியாக விமர்சனங்கள் வருவதால் விரைவில் பார்க்க திட்டமிருக்கிறேன்... பார்த்துவிட்டு வாசித்துக் கொள்கிறேன்.... :)//

    அந்த நல்ல மாதிரியான விமர்சனங்களை படிக்கலையா? :D

    //இதை மட்டும் வாசித்தேன்...//

    :D :D முடியல//

    ;)

    இன்னும் அது முடியலையா? நடக்கட்டும்

  • LOSHAN

    rajasundararajan said...
    //சிறு சிறு பாத்திரங்களும் மிகக் கவனமாகத் தேர்வு செய்யப்பட்டுக் கையாளப் பட்டிருப்பதும், அவர்கள் படத்தின் முக்கிய கட்டங்களைத் தீர்மானிப்பதும் அருமை.//

    உங்கள் கனிப்புகளும் நல்லெண்ணமும் கூட அருமை.//

    கணிப்பை சொன்னீர்களா? ஓகே.
    nandri

    ==============================

    மாறன் said...
    me too.//

    ??? எதுக்கு?

  • LOSHAN

    கன்கொன் || Kangon said...
    //அந்த நல்ல மாதிரியான விமர்சனங்களை படிக்கலையா? :D //

    ஆகா...
    தேடி வந்து தாக்குறானுகளே....

    ஐயா! நல்ல விமர்சனம் எண்டது ஒருவரியில் சொல்பவற்றைத்தான்.
    ருவிற்றரில் 'அங்காடித் தெரு அருமை' என்று நிறையப் பேர் சொன்னதால் தான் அப்படிச் சொன்னேன்...

    எப்பிடி ஐயா தாக்குறதுக்கு என்னத் தேர்தெடுக்கிறீங்க?
    அவ்வ்வ்வ்வ்....//

    அது தான் புதிய வந்தி என்று சொன்னமில்ல.. ;)

    பாருங்க அடுத்ததா சீனியர் வந்தியே வந்திருக்காரு..


    ========================

    வந்தியத்தேவன் said...
    ஆறுதலாக பார்க்கவேண்டும். அதுசரி யாரப்பா அந்த ட்ரீம் கேர்ள்? :-)//

    ஆறுதலாவே பாருங்க.. எனக்கும் தெரியாதப்பா.. யாரோ ஒரு அனானிப் புண்ணியவதி. தன்னை அவ்வாறு சொல்லி அனுப்பி இருந்தார்.

  • LOSHAN

    நிந்தவூர் ஷிப்லி said...
    அடிமட்ட மக்களின் உணர்வகளையும் காதலையும் உணர்வபூர்வமாக வடித்துச்செதுக்கியிருக்கிறார்கள்.புதுமுகம் மகேஷை விட கற்றது தமிழ் அஞ்சலி நடிப்பில் பிய்த்து உதறுகிறார்.அவரது முகபாவங்கள் பிரமிப்பூட்டுகின்றன.]

    வறுமையில் உழலும் சராசரிக்கும் குறைவான இளைஞர்களின் வாழ்வு படம் பார்ப்பவர்களை சில நாட்களேனும் உலுக்கி எடுக்கும்.
    படத்தில் பாண்டியின் நகைச்சுவைகள் ரசிக்க வைக்கின்றன.அவரது காதலிக்காக அவர் கவிதை எழுத துடிப்படும் கடவுள் வாழ்த்தை கவிதையாக மாற்றுவதும் செம ஜாலி.
    படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள் இருந்தும் பின்னணி இசை ஒத்துழைக்கவில்லை.பாடல்கள் அத்தனையும் அற்புதம்.நா.முத்துக்குமாரின் வரிகளில் எல்லாப்பாடல்களுமோ உணர்வுபூர்வமானவை."பூமியின் மடியில் ஏழைகள் ஜனனம்"இறைவன் படைப்பில் பிழையில்லயா?"என்கிற அவரது கேள்விக்கு விடைதான் இன்னும் கிடைத்தபாடில்லை.
    படத்தில் ரசிக்க வைப்பவை

    மகேஸ்
    அஞ்சலியின் நடிப்பு
    கருங்காலி
    பாண்டி
    பாடல்கள்
    ஒளிப்பதிவு
    வசனம்
    இயக்கம்

    படத்தில் உறுத்த வைப்பவை

    சந்று இழுவையான உணர்ச்சிக்கோப்பு
    நாடகத்தனம்
    பின்னணி இசை

    மொத்தத்தில் தமிழ் சினிமாவுக்கு தான் ஒரு வசந்தமயமான இயக்குநர் "வசந்தபாலன்"என்று நிரூபித்திருக்கிறார.அய்யா..உங்க கிட்ட இருந்து இன்னும் நிறய எதிர்பார்க்கிறோம்..

    //

    நல்ல விமர்சனம் ஷிப்லி.

  • LOSHAN

    யோ வொய்ஸ் (யோகா) said...
    பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன், உங்கள் பதிவு பார்த்ததும் கட்டாயம் இவ்வார இறுதியில் பார்ப்பது என முடிவு செய்து விட்டேன்.//

    நல்லது. கட்டாயம் பாருங்கள்.

    ===============

    shabi said...
    'வெயில்' மூலம் ஆச்சரியபடுத்தி, உருகவைத்த வசந்தபாலனின் இரண்டாவது படைப்பு.////ITHU இவரின் 3 படம் .First பட்ம் ஆல்பம்//

    அமாம். நீங்க முதலிலேயே வாசித்து தாமதமா பின்னூட்டுரீன்களோ?

    திருத்தி விட்டேனே.. பார்க்கல?

    ============

    Sabarinathan Arthanari said...
    நல்ல விமர்சனம்
    நன்றி//

    நன்றி.



    =======================

    அனுதினன் said...
    இதுவரை படத்தை பார்க்க வில்லை அண்ணா!!!

    உங்கள் விமர்சனம் நன்றாக இருப்பதாலும் , தமிழ் சினிமாவை காப்பாற்றும் எண்ணம் இருப்பதாலும் படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன்//

    ஆகா// நன்றி..

  • Nimalesh

    wanna watch it soon got struck with the IPL.........lol

  • நிமல்-NiMaL

    அண்மைக்கால தமிழ் படங்களில் நல்ல படங்கள் என்று சொல்லப்பட்டவற்றில் பெரும்பாலானவை அழுகாச்சி படங்களாகவே இருக்கின்றன.

    பார்வையாளனை அழவைப்பது மட்டும் செய்துவிட்டு படம் ஓடவிலை, ஓடவைக்க வேண்டும் என்றால் எப்படி?

    உங்களிடம் யாராவது வந்து புதுசா ஒரு படம் வந்திருக்கு 2 மணித்தியாலத்தில 1 1/2 மணித்தியாலம் அழலாம், வாறிங்களா பாப்பம் எண்டா யார் பார்க்க போவார்கள்...?

    உணர்வு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துதல் என்பதற்கும் அழவைப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

    "என்னைப் பொறுத்தவரை" அங்காடத்தெரு அழ மட்டுமே வைக்கிறது...!!

  • Jaleela

    நல்ல தொகுப்பு,, டீவியிலும் விமர்சனம் பார்த்தேன்

  • LOSHAN

    Nimalesh said...
    wanna watch it soon got struck with the IPL.........லொள்//
    லலித் மோடி கூட இப்படி சொல்ல மாட்டார். ;)

    =======================



    நிமல்-NiMaL said...
    அண்மைக்கால தமிழ் படங்களில் நல்ல படங்கள் என்று சொல்லப்பட்டவற்றில் பெரும்பாலானவை அழுகாச்சி படங்களாகவே இருக்கின்றன.

    பார்வையாளனை அழவைப்பது மட்டும் செய்துவிட்டு படம் ஓடவிலை, ஓடவைக்க வேண்டும் என்றால் எப்படி?

    உங்களிடம் யாராவது வந்து புதுசா ஒரு படம் வந்திருக்கு 2 மணித்தியாலத்தில 1 1/2 மணித்தியாலம் அழலாம், வாறிங்களா பாப்பம் எண்டா யார் பார்க்க போவார்கள்...?

    உணர்வு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துதல் என்பதற்கும் அழவைப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.//

    அது சரி ஆனால் அழுகாச்சி என்பதற்கும் உண்மையை உணர்த்தி பார்வையாளனை உருக வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கு.

    வாழ்க்கையின் சில நிதர்சனமான பக்கங்களை திரையில் காட்டினால் அப்படித் தான்.பொய்யான மேற் பூச்சுக்கள் மட்டுமே திரைப்படம் அல்லவே.
    சில நிதர்சனங்களும் படமாகலாம். அதுவே அங்காடித் தெரு.


    "என்னைப் பொறுத்தவரை" அங்காடத்தெரு அழ மட்டுமே வைக்கிறது...!!//

    இது தான் ரசனை வேறுபாடு என்கிறேன் நான்.

  • LOSHAN

    Jaleela said...
    நல்ல தொகுப்பு,, டீவியிலும் விமர்சனம் பார்த்தேன்//

    நன்றி ஜலீலா.

  • செ.பொ. கோபிநாத்

    அங்காடித் தெரு பார்த்துவிட்டு என்னுடைய பதிவு எழுதும் வரை வேறு பதிவை வாசிக்கக் கூடாது என்பதனால் தான் உங்கள் பதிவு வாசிப்பதற்கு சிறிது தாமதாமாகி விட்டது. ஆழமான ஆய்வு. நானும் ரசித்தேன். படம் பார்த்த போது பல இடங்களில் என் கண்களும் பனித்தது....

  • யோ வொய்ஸ் (யோகா)

    நேற்று உங்கள் பதிவை வாசித்து என்பனுடன் பகிர்ந்து கொண்டேன். அவன் கூறிதான் கண்டியில் இன்றுடன் இப்படத்தை தூக்க போவதை அறிந்தேன். ஒரு மாதிரியாக படத்தை பார்த்து விட்டேன்.

    படத்தின் பல பகுதிகளை நான் நேரில் பார்த்திருக்கிறேன். என்ன நான் சிறிய அளவில் பார்த்திருக்கிறதை வசந்த பாலன் விசாலமாக காட்டியிருக்கிறார்.

    படம் முடிந்து ஒரு மணித்தியாலமாகிறது, ஆனாலும் இன்னும் மனசு வலிக்ககிறது

  • Vijayakanth

    படம் பார்த்துட்டு விமர்சனத்தை வாசிக்கிறேன்.... கதை தெரியாமலிருந்தா தான் படத்தை முழுமையா அனுபவிக்க முடியுமெண்டு கேள்விபட்டேன்

  • thalaivan

    வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    http://www.thalaivan.com

    Hello

    you can register in our website http://www.thalaivan.com and post your articles

    install our voting button and get more visitors

    Visit our website for more information http://www.thalaivan.com

  • கோப்பாய் பொடியன்

    அட நீங்க வேற... நாங்களே சுறா எப்ப வரும் எண்டு பார்த்து கொண்டிருக்கிறம்....

  • subankan

    ஏன் அண்ணா பின்ணனி இசையில் என்ன குறைச்சல்....சும்மா super அண்ணா................

  • RajaS* Forever *

    உங்கள் விமர்சனம் அருமை ..நீண்ட நாடகுளுக்கு பிறகு திரை அரந்குஇர்கு சென்று பார்த்த திரை படம் ...என்னை கண் கலங்க வைத்த படமும் கூட...வாழ்கை நடத்துவதில் எவழுவு இடயுர்கள் ? அதில் லும் கதை நாயகன் வென்று காதலுக்கும் தன் குடும்பத்திற்கும் நாயகன் ஆக தெருகிறான்....அந்த குள்ள மணிதரின் மனைவி பேசும் வார்த்தைகள் மிகவும் அருமை ..தியேட்டர் கை தடல்ல்கள் காதை அடைத்தன...அவனிடம் மட்டும் ஆவது கொஞ்சம் ரோஷ தோடு இருகிரநே என நாயகி சொல்வது நான் ரசித்த வசங்கள்....இது போன்ற திரை படங்கள் தமிழ் சினிமா வை ஒரு உயரத்திற்கு கண்டிப்பாக எடுத்து செல்லும் ...நன்றி வசந்த பாலன்...அண்ட் ஆல் அச்டோர்ஸ் ....

  • ஆதிரை

    படம் எனக்குப் பிடிக்கவில்லை.

    தியேட்டரில் இருக்கின்றோமா காசு கொடுத்து செத்த வீட்டுக்கு வந்தோமா என்ற உணர்வுதான் எழுகின்றது


Post a Comment

Related Posts with Thumbnails

சொடுக்கி இணைக்க...



Creative Commons License
LOSHAN - லோஷன் by A.R.V.Loshan is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.