பந்தைக் கடித்த அப்ரிடி..பாகிஸ்தான் மோசடி..

2/01/2010 01:08:00 AM

(11) Comments


ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியின் மேல் வெற்றி..
பாகிஸ்தானிய அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் வெற்றியீட்டி 5-0 என்ற முழுமையான வெற்றியைத் தனதாக்கியுள்ளது ஆஸ்திரேலியா.(White wash)
ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இப்படியான சாதனை வெற்றி இரண்டாவது தடவையே.
அதுபோல பாகிஸ்தானும் இம்ரான்கான் தலைமையில் 1988 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளிடம் வாங்கிக்கட்டிய பிறகு இப்போது தான் இப்படி அவமானகரமாகத் தோற்றிருக்கிறது.

அணித்தலைமைப் பிரச்சினை, அணித் தெரிவுப் பிரச்சினை என்று பல காரணங்கள் பாகிஸ்தானைத் தோல்வியின் பாதையில் தள்ளிக் கொண்டிருந்தாலும், அடுத்து புதிய தலைவர் அறிவிக்கப்படப் போகிறார் என்று நம்பிக்கை வைத்திருந்த பாகிஸ்தானின் ட்வென்டி 20 தலைவர், இன்று முதல் தடவையாக ஒரு நாள் போட்டியொன்றில் தனது அணியைத் தலைமை தாங்கிய ஷஹிட் அப்ரிடி பாகிஸ்தானிய அணிக்கும் தனக்கும் அவமானகரமான மாறாக் களங்கம் ஒன்றைத் தேடித் தந்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியுடன் இறுதிக் கட்டம் வரை தான் பெற்றிருந்த சிறிய ஓட்டப் பெறுதியோடு போராடி இன்று பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் தோற்றுப் போனது.
இறுதி வரை போராடியதால் பாகிஸ்தான் பாராட்டப்படவேண்டியது தான்.

ஆனாலும் காயமுற்ற யூசுப்புக்குப் பதிலாக இன்று தலைமை தாங்கிய அப்ரிடி எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என்று முறைகேடாகப் பந்தைக் கடித்து வடிவத்தை மாற்றி (Ball tampering) விளையாடியது தொலைக்காட்சிக் கமிராக்களுக்குள் அகப்பட்டு இன்று அவர் குற்றவாளியாகி கூனிக் குறுகி நிற்கிறார்.

ஒரு தடவையல்ல, இரு தடவை அப்ரிடி இவ்வாறு பந்தைக் கடித்துள்ளார்.


அப்ரிடி பந்தைக் கடித்த காட்சி





என்ன நினைத்துக் கொண்டு இப்படி ஒரு அடி முட்டாள்தனமான காரியத்தில் இறங்கினார் அப்ரிடி?
எத்தனை காமிராக் கண்கள் தன்னை குறிவைக்கும் என்று உணராத முட்டாளா?
இவரை நம்பி பாகிஸ்தானை இனி எப்படி வழிநடத்த ஒப்படைக்க உள்ளார்கள்?

நடுவர்கள் இதைக் கண்டு உடனடியாகப் பந்தை மாற்றியுள்ளார்கள்.தொலைகாட்சி நடுவர் டக்கர் மூலமாக ஆடுகள நடுவர்களான அசோகா டீ சில்வா, போல் ரைபிள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டதைத் தோடர்ந்து அப்ரிடி எச்சரிக்கப்பட்டு பந்து மாற்றப்பட்டது.


பின்னர் போட்டி முடிந்ததும் போட்டித் தீர்ப்பாளர் ரஞ்சன் மடுகல்லவினால் விசாரிக்கப்பட்ட போது தனது தவறினை ஒத்துக் கொண்டுள்ளார்.
இதையடுத்து கடுமையான எச்சரிக்கையுடன் இரண்டு ட்வென்டி 20 போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகும் பாகிஸ்தானிய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தனது அணிக்கு ஒரேயொரு வெற்றியையாவது பெற்றுக் கொடுக்கவே இவ்வாறு நடந்து கொண்டதாக ஏதோ ஒரு தியாகம் செய்தது போல அறிக்கை விட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் உலகின் எல்லா அணிகளுமே இவ்வாறு பந்தின் வடிவத்தை மாற்றி விளையாடுவதாகவும் (tampering) கூறியுள்ள அப்ரிடி, எனினும் தனது வழி தவறானது என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.


Sky Sports தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அப்ரிடியின் Bite gate மோசடி தொடர்பான கலந்துரையாடல்..


அசகாயத் திறமைகளை, அதிரடி ஆட்ட நுட்பங்களைக் கொண்டுள்ள அப்ரிடி தன்னை நம்பாமல்,தன வீரர்களை நம்பாமல் இப்படியான முறைகேடான,தில்லு முல்லுகளை நம்பி தான் தலைமை தாங்கிய முதல் போட்டியிலேயே அவமானப்பட்டதை என்னவென்பது?

பாகிஸ்தானிய கிரிக்கெட் சபை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

முன்பு பாகிஸ்தானிய வீரர்களும் தலைவர்களுமான இம்ரான் கான், சப்ராஸ் நவாஸ்,ஜாவேத் மியான்டாட்,வசீம் அக்ரம்,வக்கார் யூனுஸ் ஆகியோர் மீது இருந்த Ball tampering சந்தேகங்கள் அப்ரிடி நடந்து கொண்டதைப் பார்த்தால் பாகிஸ்தானில் இது தொடர்ந்து நடக்கின்றது என்ற தொடர் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதே...

முன்பு இம்ரான், சப்ராஸ் காலத்தில் சோடா மூடி.. பின்னர் அக்ரம்,யூனுஸ் காலத்தில் வசலின்... இப்போது அப்ரிடியின் பல்.. சாதனைகள் எல்லாம் சந்தேகமாக மாறும் போல இருக்கே..

இப்போது பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு புதிய சிக்கல்..

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தத் தொடரில் இறுதியாக நடைபெறவுள்ள ட்வென்டி 20௦ போட்டிக்கு யார் பாகிஸ்தானிய தலைவர்?
அப்ரிடிக்கு இரு போட்டித் தடை..
யூசுப்&யூனுஸ் கான் ட்வென்டி ௨௦ குழுவில் இல்லை..
சோயிப் மாலிக்கா அல்லது கம்ரான் அக்மலா?
இருவருக்குமே அணிக்குள்ளே நிரந்தர இடமில்லை..ஆதரவும் இல்லை.. இருவரும் பெரியளவு இலும் இல்லை..
பாவம் பாகிஸ்தான்.

ஆசிய அணிகளைத் திட்டமிட்டு ஒதுக்குகிறார்கள்,பழிவாங்குகிறார்கள் என்று ஒரு பக்கம் கூச்சல் போட்டுக்கொண்டிருக்க, பாகிஸ்தானின் இவ்வாறான நடத்தைகளால் ஆசிய அணிகள் அனைத்துக்குமே கெட்ட பெயரும் சந்தேகமும் வந்து சேர்கிறதே..
அப்ரிடி பந்தைக் கடித்து ஸ்விங்,ரிவேர்ஸ் ஸ்விங் எடுத்தபின்னர், கஷ்டப்பட்டு சொந்த முயற்சியால் சாகீர் காணும் ,ஸ்ரீசாந்தும், அல்லது குலசேகரவும்,மாலிங்கவும் ஸ்விங் வீசினாலும் எல்லோரும் சந்தேகப்படத்தானே செய்வார்கள்..

பந்தயக்காரர்கள்,பந்து உடைப்பவர்கள்,அணிக்குள்ளேயே அரசியல் செய்பவர்கள்.. எல்லாமே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களாகத் தானே இருக்கு..

பாகிஸ்தான் அப்ரிடிக்களே திருந்துங்கள்.. வெல்வது மட்டுமே விளையாட்டல்ல.. 'விளையாட' முடியாவிட்டால்.. விலகிவிடுங்கள்..


ஆஸ்திரேலிய வெற்றி பற்றி எழுதலாம் என்று வந்தால் 'அப்ரிடியின் பந்துக் கடி' பற்றி எழுதியே ஆகவேண்டும் என்றாகி விட்டது..
நாளை பெடரர் பற்றியும், ஆஸ்திரேலிய வெற்றி பற்றியும் பார்க்கலாம்..





11 Responses to "பந்தைக் கடித்த அப்ரிடி..பாகிஸ்தான் மோசடி.."

  • எட்வின்

    அடடா... இவ்ளோ விஷயம் நடந்து போச்சா.

    பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள்,தான்தோன்றி தனமாகத்தான் பெரும்பாலும் செயல்படுகிறார்கள்.இரு ஆட்டங்கள் ஆட தடை விதித்தால் மட்டும் போதாது.

    கிரிக்கெட்டில் இருந்தே இவர்களைப் போன்றோரை விலக்கி வைக்க வேண்டும்.

  • Anonymous

    Its good decision not to include these culprits in IPL...

  • Kiruthikan Kumarasamy

    கொஞ்ச நாளைக்கு முன்னால தான் ஆசிய வீரர்களுக்கு ஆதரவாக ஒரு பின்னூட்டம் போட்டேன் உங்கள் பதிவில். அதுக்குள்ள அஃப்ரிடி கவிழ்த்திட்டார்....முட்டாள்தனமான காரியம்

  • Balavasakan

    ஐயோ பாவம் அண்ணா அபரிடிக்கு சரியான பசியோ தெரியல....

  • Bavan

    அடடா, என்னால் போட்டியை இறுதிக்கட்டத்தில்தான் பார்க்க முடிந்தது, நானும் ஏதோ பாகிஸ்தான் டிவற்றி பெறக் கஷ்டப்படுகிறார்கள் என்றல்லவா நினைத்தேன்.

    அப்ரிடி இப்படிச்செய்யும் போது பந்து வீச்சாளர்களும் அதற்கு உடந்தையாக இருந்தது பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கையை குழிதோண்டிப் புதைக்கச்செய்து விட்டது.

    யூனிஸ்கானின் சிறந்த தலைமை இன்றைய பாகிஸ்தான் அணியில் யாருக்கும் இல்லை

    பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நட்டத்தில் இயங்குவதால் சாப்பாட்டுக்கு வழியின்றி அப்ரிடி இப்படி செய்திருப்பாரோ??... ஹீஹீ

  • கனககோபி

    விளங்கின மாதிரித்தான்...

    பாகிஸ்தான் அணியில் குழப்படி இல்லாத பெடியன் அப்ரிடி என்று நினைத்தேன், எனது நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்...

    அந்தக் கலந்துரையாடலில் சொல்லப்படுவது போன்று மைதானம் முழுதும் 27 கமெராக்கள் இருக்கும் போது என்ன யோசித்துக்கொண்டு இதைச் செய்தார் என்று தெரியவில்லை.

    றிவேர்ஸ் ஸ்விங்கை எடுக்க இவ்வளவு கேவலமாகச் செயற்படத்தான் வேண்டுமா?

    வாழ்க பாகிஸ்தான்....

  • கனககோபி

    அண்ணா, அந்த வீடியோவில் ஒன்றையும் கவனித்தீர்களா?
    பந்துவீச்சாளர்களும் சிரித்தபடி இருக்கிறார்கள்...
    முக்கியமாக ரானா நவீட் உல் ஹஷனின் சிரிப்பு ஆயிரம் கதை சொல்கிறது.

    முற்கூட்டியே திட்டமிட்டிருப்பார்களோ?

  • அனுதினன்

    அண்ணா பாவம் பாகிஸ்தான் அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியே!!! கனககோபி அண்ணா சொன்னது போல பந்து வீச்சாளரின் புன்னகை ஆயிரம் கதை சொல்ல்கிறது....

    அப்ப T20யிலும் பாகிஸ்தானுக்கு ஆப்பா???

  • Nimalesh

    yen pa Asian crickerts mattum ippadi haiyooo.....

  • யோ வொய்ஸ் (யோகா)

    கேவலமான வேலையை செய்துள்ளார்.

    முன்னர் ஒரு முறை நகத்தால் மனோஜ் பிரபாகர் பந்தை சேதப்படுத்தியதை வீடியோவில் பதிவு செய்ததை நினைவில் வைத்தாவது அப்ரிடி நடந்திருக்க வேண்டும்

  • Anonymous

    Video not available! check ur links


Post a Comment

Related Posts with Thumbnails

சொடுக்கி இணைக்க...



Creative Commons License
LOSHAN - லோஷன் by A.R.V.Loshan is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.