அன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்

திரைப்பாடல்களை நான் ரசிக்க ஆரம்பித்தது எந்த வயதில் என்று சரியாக ஞாபகமில்லாவிட்டாலும் 5 – 6 வயதுகளிலேயே அப்போது வானொலிகளில் அதிகம் ஒலிபரப்பாகி வந்த 'பருவமே புதிய பாடல்பாடு' -நெஞ்சத்தைக் கிள்ளாதே, 'மழையே மழையே' - அம்மா, 'ஐம்பதிலும் ஆசை வரும்',ஒரு தலை ராகம் படப் பாடல்கள் என்பவற்றை ரசித்து முணுமுணுத்தது இப்போதும் மனதுக்குள் ஞாபகம் இருக்கிறது.
பாடல் இசை பாடக பாடகியர் பற்றி நன்கு தெரிய ஆரம்பித்த பின்னர் முதலில் நான் ரசிக்க ஆரம்பித்தது SPBஇன் குரலைத்தான்! இப்போது வரை எத்தனை நூறு குரல்கள் வந்தாலும் SPBஇன் குரலில் பாடலொன்றைக் கேட்பது போல ஒரு சுகானுபவம் எனக்கு வேறுயார் குரலிலும் கிடைத்ததில்லை.
இப்போதும் SPBஇன் குரலில் பாடல் தராமலிருக்கும் புதிய இசையமைப்பாளர்களை மனதிற்குள் வைவதும் உண்டு. அதுபோல SPB பாடாத சில புதிய பாடல்களை மனதிற்குள்ளேயோ வெளியேயோ நானே பாடி (யாரும் கேட்காதீங்க..அதுக்குப் பிறகு பாடல்களே உங்களுக்குப் பிடிக்காமல் போல்வரும் என்று யாராவது வதந்தினால் நம்பாதீங்க..) SPBஇன் குரலில் அந்தப் பாடல் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்வதும் உண்டு.
கவிதைகளை ரசிக்கத் தொடங்கிய பின் வைரமுத்துவின் மீது பிரியமும் மதிப்பும் ஏற்பட்டது. வைரமுத்துவின் பாடல்களில் ரசிப்பு ஏற்பட அப்போது தனியான இசை ராஜாங்கம் நடாத்தி வந்த இளையராஜாவும் முக்கிய காரணம்!
இளையராஜா & வைரமுத்து இணைந்த பொற்காலத்தில் பாடல்கள் அத்தனையினதும் ரசிகன் நான்! இன்று வரை ஒரு வரி மறக்காமல் ஞாபகம் வைத்துள்ளேன். அந்தக்கால இளையராஜாவின் இசை ரசிகன் என்று சொல்வதில் இன்னமும் எனக்கும் பெருமை!
பின் வந்த காலத்தில் இளையராஜாவின் monopoly பிடிக்காமல் போனாலும் வைரமுத்து - இளையராஜாவின் பிரிவால் இசைஞானி மீது பிடிப்புக் குறைந்தாலும் கூட இலுப்பைப்பூ சர்க்கரைகளை ரசிக்கத் தோன்றாமல் இளையராஜாவின் இசையைத் தான் ரசித்துக் கொண்டிருந்தேன்.
இடையிடையே வந்த ஒரு சில தேவா,S.A.ராஜ்குமார்,வித்யாசாகர் இசைகளும் மனதைக் கவரவே செய்தன.
90களில் ரோஜாவுடன் வந்த A.R.ரஹ்மான் இசையலையில் அப்படியே ரஹ்மான் ரசிகனாக/வெறியனாக மாறியிருந்தேன்.
அப்படியிருந்தும் தேவர்மகன் பாடல்களையும் ரோஜா பாடல்களையும் கொண்டிருந்த ஒரு ஒலிப்பதிவு நாடாவை (CASSETTE) முதலில் போட்ட போது அவற்றில் நான் கூடுதலாக ரசித்தது இஞ்சி இடுப்பழகி மற்றும் போற்றிப் பாடடி ஆகியவற்றை தான்!
'சின்னச்சின்ன ஆசை' பாடல் பற்றி எனது நண்பர்களுக்கு நான் சொன்ன முதல் விமர்சனம் 'யாரோ சின்னப் பையன் Nursery Rhymes மாதிரி இசையமைத்திருக்கின்றான்.' எனினும் பின்னர் ரஹ்மானை முதலில் ரசிக்கத் தூண்டியதும் வைரமுத்துவின் வரிகள் தான்!
'காதல் ரோஜாவே' பாடலில் 'முள்ளோடுதான் முத்தங்களா' வரிகள் தான்!
ஆச்சரியம் பாருங்கள் - அந்தப்பாடலும் ரஹ்மானின் இசையில் - SPB & வைரமுத்து.
ரஹ்மானின் அத்தனை cassettes,cds தேடிப் பிடித்து வாங்கி,சேகரித்து வைப்பதே அப்போது என்னுடைய முதல் பொழுதுபோக்கு. ரோஜா,இந்திரா,பாம்பே,டூயட்,காதலன்,gentleman,மனிதா மனிதா என்று ரஹ்மானின் பாடல்கள் கேட்டுக் கேட்டு என் walkman பழுதாய்ப் போனதும் உண்டு.

ரஹ்மானின் ஒவ்வொரு புது நுட்பங்களையும், புதிய இசைப் பாணிகளையும் ரசிப்பதும் ,ஒத்த அலைவரிசை உடைய நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதும் எனக்குத் தனியான மகிழ்ச்சி தரும் விடயங்கள்.
ரஹ்மானின் இசைக்கு முன்னால் மற்ற எல்லோருமே ஏனோ ரொம்பப் பின்னாலேயே நிற்கிற மாதிரி ஒரு தோற்றப்பாடு என் மனதிலே இருந்து வந்தது.. ரஹ்மானின் பாடல்கள் பிடிக்க இன்னொரு காரணமும் இருந்தது எனக்கு பின்னரே உணரக்கூடியதாக இருந்தது.
அந்தக் கால கட்டத்தில் ரஹ்மானின் இசையில் பெரும்பாலான பாடல்களை எழுதிவந்தவர் வைரமுத்து. இன்று வரை ரஹ்மானின் மெட்டுக்களுக்கு வைரமுத்துவின் சொற்கட்டுக்கள் மட்டுமே சரியாகப் பொருந்தி சுவை தருவதாக நான் கருதுகிறேன்.அவருக்கு நிகராக வாலியை வேண்டுமானால் சொல்லலாம்.
எப்போது ரஹ்மானுக்கும்,வைரமுத்துவுக்கும் இடையில் பிளவு ஏற்படுமளவுக்கு முறுகல் வந்ததோ-
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இசை வெளியீட்டு விழாவில் வரிகளின் இனிமையை இசை மேவுவதாக வைரமுத்து குறைப்பட்டதை அடுத்தே இந்த முறுகல் தோன்றியது என்று நான் அறிந்தேன்.
அன்றிலிருந்து ரஹ்மானின் இசையில் வேறு பலரும் பாடல்கள் எழுத ஆரம்பித்தனர்.தெனாலி தான் ஆரம்பம் என்று நம்புகிறேன். அந்தப் படம் கமலுக்காகப் பிடித்ததே தவிர பாடல்கள் எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை.. (வைரமுத்து பாடல் எழுதாது தான் காரணம் என்று நினைக்கிறேன்)
ஏனோ அதன் பின்னர் ரஹ்மானின் இசைப் பாணியும் மாற்றம் பெற ஆரம்பித்தது.அவரது தேடல்கள் உலக தரத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது.அவரது அந்த மாற்றமும்,தெனாலிக்குப் பிறகு வெளிவந்த அவரது பாடல்களின் வித்தியாசத் தன்மையும் என்னை ஏனோ ரஹ்மானிடத்திலிருந்து அன்னியப் படுத்தியது போலவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.
ரஹ்மான் இசையமைத்த அநேக மணிரத்னத்தின் படங்கள் ஹிந்திக்கும் சென்றதால் அல்லது அங்கிருந்து வந்ததால் இந்தித் தாக்கம் தமிழின் தனித்துவத்தைக் குறைத்திருக்கவும் கூடும்.
நான் ரஹ்மானின் இசை எனக்குப் பெரிதாகப் பிடிக்காமல் போனது என்று சொல்கிறேனே தவிர, எந்த விதத்திலும் அவரது இசைத் தரம் குறைந்துவிட்டது என்று எங்கேயுமே சொன்னதுமில்லை;சொல்லவும் இல்லை.
அதற்குப் பிறகு நான் ரஹ்மானை ரசித்தபோதே,மனதில் இடையிடையே சாரலாயும்,தனது சில அதிரடி,மேற்கத்தியப் பாணியிலான இசையினாலும் தனக்கென ஒரு இடத்தை எடுத்துக் கொண்ட வித்யாசாகரின் இசையாலும்,மெட்டுக்களாலும் கவரப்பட்டேன்.
இசைஞானி,ரஹ்மானுக்குப் பிறகு யாருமே தொடாத இசையின் நுண்ணிய,மென்மையான பிரதேசங்களைத் தொட்டு,மனதில் சிலிர்ப்பூட்டியவர் வித்யாசாகர் தான் என்று அடித்து சொல்லத் தயார்.ஆனால் பாவம் ஏனோ இன்னமும் புகழ் வெளிச்சம் பெரிதும் படாத ஒருவராகவே இருந்து வருகிறார்.
இந்தியத் திரை இசையுலகின் மிகப் பெரிய,பரிதாபமான under rated musician வித்யாசாகர் தான். (இவர் பற்றி எழுத வேண்டும்,எழுதவேண்டும் என்று பதிவு போடத் தொடங்கிய நாளில் இருந்தே யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.. ஒன்றில் நேரம் இருக்காது;இல்லையென்றால் சோம்பல் விடாது)
இன்னமும் ரஹ்மானை ரசிக்கிறேன்.. முன்பு 90,2000களில் ரசித்தது போல,எல்லாப் பாடல்களையும் அல்ல..ஒரு சில பாடல்களே மனதுக்குப் பிடித்து இருக்கிறது. ரஹ்மானின் தீவிர ரசிகர்கள் இத்தனை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.. ஆனாலும் அவரது புதிய முயற்சிகள் வியப்பை ஏற்படுத்துவதையும்,சாதனைகள் எங்களுக்குப் பெருமை தருவதையும் யாரும் மறுக்க முடியாது.
ஆனால் தனியே தமிழில் ரஹ்மான் லயித்திருந்தபோது தந்த இசை இனிமையின் தனித்துவம் ஏனோ இப்போது இல்லை என்று நான் கருதுகிறேன்.ஆனால் இந்த ரசனை மாற்றம் அவர் உயரத்துக்கு நான் இல்லையோ என்பதும் காரணமாக இருக்கலாம்.
அவர் ஒஸ்கார் வெல்வதற்கும்,இதுவரை வென்ற சர்வதேச விருதுகளுக்கும் இந்த இடைவெளியும்,ரஹ்மானின் புதிய கால மாற்றத்தினாலான தேடலுமே காரணமாக இருக்கலாம்.
சர்வதேச விருதுகள் ரஹ்மானைத் தமிழில் இருந்து அந்நியப்படுத்தி,பெரிய இடைவெளியைத் தந்து விடுமோ என்று உண்மையாகவே நான் கவலைப்படுகிறேன்.அதற்காக அந்த கட்டுக்கடங்கா இசைப் புயலை எம் சுயநலத்துக்காக தமிழ் என்ற வட்டத்துக்குள்ளேயே வைத்திருப்பதும் நல்லதில்லையே..
எத்தனையோ புத்தம் புதிய பாடல்களை தினந்தோறும்,ஒலிபரப்பியும்,கேட்டும் வந்தாலும், இன்றும் எனக்குப் பிடித்த பாடல்களாக நான் ரசிப்பதும் உருகுவதும் எண்பதுகளின் இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களும்,ரஹ்மானின் ஆரம்பகால மெட்டுக்களும் தான்..
இப்போதும் எனது செல்பேசியில் வரும் அழைப்பொன்று "வெண்ணிலாவின் தேரிலேறி.." என்று ரஹ்மானும் நானும் இணைந்திருந்த (!?)அந்தக் காலத்தை ஞாபகப்படுத்துகிறது.



நல்ல இடுகை. ரஹ்மான் என்றுமே மறக்க முடியாத இசையமைப்பாளர். ஆனால் இப்போது வரும் அவரின் பாடல்களில் தமிழ் இசை குறைகிறது.
February 12, 2009 4:08 PM
நல்ல இடுகை. ரஹ்மான் என்றுமே மறக்க முடியாத இசையமைப்பாளர். ஆனால் இப்போது வரும் அவரின் பாடல்களில் தமிழ் இசை குறைகிறது.
February 12, 2009 4:09 PM
ம்..ரகுமானின் தனித் திறமைகளுள் நானும் லயித்துப் போனது உண்மை...எனக்கும் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேனில் வரும் எங்கே எனது கவிதை ரொம்ப பிடிக்கும்..
February 12, 2009 4:26 PM
ஆனால் தனியே தமிழில் ரஹ்மான் லயித்திருந்தபோது தந்த இசை இனிமையின் தனித்துவம் ஏனோ இப்போது இல்லை என்று நான் கருதுகிறேன்.ஆனால் இந்த ரசனை மாற்றம் அவர் உயரத்துக்கு நான் இல்லையோ என்பதும் காரணமாக இருக்கலாம்.
you r corrcet loshan anna.
nice article :)
February 12, 2009 4:33 PM
ராசா நீரும் என்னை மாதிரி இளையராசாவின்ரை ஆளே?? அப்ப நான் உம்மட்டை ஒரு பாட்டு வரி தாறேன் மோனை... பாட்டைக் கண்டு பிடிக்க ஏலுமே?? '' அத்தை மகன் கொண்டா பித்து மனம் திண்டாட அன்பே இனி நெஞ்சில் சுமபேன்.....புத்தம்....புது......???????
ராசா நான் முந்தி என்ரை காலத்திலை உவர் எம்.எஸ்.வீயின்ரை ஆளா இருந்தனான், உவையள் சங்கர் கணேஸ், மற்றது ஆதித்திய கணேஸ் உவையளின்ரை பாட்டும் எனக்குப் பிடிக்கும்.. இண்டைக்கும் என்ரை மனுசியும் நானும் அடிக்கடி கேட்கிற ஒரு பாட்டு 'கண்ணுக்குள் நூறு நிலவு....இளையராசா...வைரமுத்து....நல்ல கூட்டணி..ஆனால் உடைஞ்சது தான் கவலை...
ஈரமான ரோஜாவே? சும்மா அந்த மாதிரிப் பாட்டுத் தெரியுமோ??? நன்றி மோனை பழசுகளைக் கிளறிப் பாத்ததுக்கு...தொடர்ந்தும் நல்ல பதிவுகள் தாரும் ராசா...
February 12, 2009 4:38 PM
ரகுமானின் தேடல் உலகளாவிய ரீதியில் பரந்து படுவதாகவே நான் கருதுகிறேன்...தமிழில் அவருக்கு சரியான அணி (மணிரத்னம், சங்கர், கெளதம்) மாதிரி அமைய வேண்டும். தமிழை விட ஹிந்தியில் அவருக்கும் இந்த அணி இலகுவாக அமைந்து விடுகின்றது :-)
February 12, 2009 5:30 PM
ம் எப்படி விஸ்வநாதன் ராமமூர்த்தியை இளையராஜாவும் இளையராஜாவை ரகுமானும் கடந்து வந்தார்களோ அதைப்போலவே ரகுமானையும் கடப்பதற்கு ஆட்கள் வந்துவிட்டார்கள்..
February 12, 2009 5:37 PM
உண்மை தான் அண்ணா... அக்கால ரஹ்மானின் பாடல்கள் மனதுக்கு நின்மதி தரக்கூடிய நல்ல மெலடி.. ஆனால் இப்போது புதிய உத்திகளுடன் புது விதமாக.... காலப் போக்கில் அன்றைய பாடல்கள் நிற்பது போல இன்றைய பாடல்கள்......?
என்னுடைய கருத்து மட்டுமே..(சண்டைக்கு வராதீங்க...)
February 12, 2009 5:40 PM
//சர்வதேச விருதுகள் ரஹ்மானைத் தமிழில் இருந்து அந்நியப்படுத்தி,பெரிய இடைவெளியைத் தந்து விடுமோ என்று உண்மையாகவே நான் கவலைப்படுகிறேன்//
நானும் எனது வகுப்பில் நண்பன் ஒருவனும் ரஹ்மான் பைத்தியர்கள் தான்..என்னவோ தெரியவில்லை, நான் அவனிடம் சொல்லிப் புலம்பும் விஷயங்கள் எல்லாத்தையும் இந்தப் பதிவில போட்டு இருக்குறீங்க..எனக்கு கூட அண்மைக்கால ரஹ்மானின் melodies அவ்வளாவாக ஒட்டிக் கொள்ளவில்லை.."சகானா சாரல்.." ஷங்கரின் கரெச்சல் தாங்காமல் ஏதோ அவசரத்தில் போட்டு குடுத்த மெட்டு மாரி இருந்தது.சக்கரக்கட்டி, அழகிய தமிழ் மகன் பாடல்களிலும் பழைய ரஹ்மானை எவ்வளவுதேடியும் காண முடியவில்லை..தன் பாடல்களுக்கு அண்மைக்காலமாக தகுந்த காட்சியமைப்பு இடம்பெறுவதில்லை என்று அவர் குறை பட்டுக் கொண்டதாக கேள்வி..அந்த லூசு S.J சூர்யாவின்ட அன்பே ஆருயிரே படத்துல அழகான "மயிலிறகே.." பாடலை உண்டு இல்லை என்டு இடுப்ப மாட்டும் காட்டி எடுத்திருந்தது அந்த லூசு..அந்தப் பாதிப்போ தெரியவில்லை.
February 12, 2009 5:50 PM
எல்லோரைப்போலவும் நானும் ரஹ்மானின் ரசிகன்தான். ஆனால் எனக்கு என்ன பிரச்சினை என்றால் ரஹ்மானால் மட்டும்தான் இப்படி எல்லாம் இசையமைக்க முடியும் என்றும் மற்றவர்களால் முடியாது என்றும் ஏனைய இசையமைப்பாளர்களை இளக்காரமாக பார்ப்பது சுத்தமாக பிடிப்பதில்லை. ஒரு குறிக்கப்பட்ட எல்லையை தாண்டிய உடன் எந்த கலைஞனையும் ஒப்பிடாமல் இருப்பது நல்லது. அவரா இவரா சிறந்தவர் என வாதிடுவது அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. தெனாலிக்கு பின்னர் என்னைப் பொறுத்தவரை (உங்களைப் போல) இவரின் பாடல்கள் என்னைப்பெரிதாக பாதிக்கவில்லை.
February 12, 2009 6:06 PM
//90களில் ரோஜாவுடன் வந்த A.R.ரஹ்மான் இசையலையில் அப்படியே ரஹ்மான் ரசிகனாக/வெறியனாக மாறியிருந்தேன்.//
நானுந்தேன்...
இதையும் பாருங்களேன்...
http://jsprasu.blogspot.com/2009/01/blog-post_07.html
February 12, 2009 6:10 PM
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இசை வெளியீட்டு விழாவில் வரிகளின் இனிமையை இசை மேவுவதாக வைரமுத்து குறைப்பட்டதை அடுத்தே இந்த முறுகல் தோன்றியது என்று நான் அறிந்தேன்.//
வைரமுத்து ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஒரு பாடலாசிரியரே எழுதவேண்டும் என்று வாதிட்டதும் ஒன்று.
மற்றபடி நீங்கள் சொல்லும் விசயங்கள் அனைத்தும் இம்மி பிசகாமல் எனக்கும் இருக்கின்றன.
ரகுமானிடம் வேலை வாங்க சிறந்த டைரக்டர்கள் நெருங்கவில்லை அல்லது ரகுமான் நெருங்கவிடவில்லை என்பதும் ஒன்று. கதிர், சூர்யா, போன்ற டைரக்டர்கள் ரகுமானிற்கு ஈடுகொடுத்து படமும் கொடுக்கவில்லை.
கட்டுரை கலக்கல். :)
February 12, 2009 6:41 PM
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
February 12, 2009 7:08 PM
70க்கு முதல் பிறந்தோர்க்கு இளையராஜா.. 90க்கு பிறகு பிறந்தோருக்கு ரஹ்மான்.. its generation difference men..
February 12, 2009 7:14 PM
நிச்சயமாகவே தமிழில் முன்பு தந்த பாடல்களைப் போன்று இப்போது ரஹ்மானால் தர முடியவில்லை என்றாலும்...இந்தியில் பல அற்புதமான மெட்டுக்களை தந்திருக்கிறார். இந்தியில் கலக்குகிறார் மனிதன். லேட்டஸ்ட்டாக அபிஷேக்கின் நடிப்பில் delhi 6 வந்துள்ளது. அருமையான பாடல்கள். கடின உழைப்பாளிகளுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் எங்கு சென்றாலும் சிறப்பு தான்.
February 12, 2009 8:31 PM
அநேக நாட்காளாக எதிர்பார்த்து இருந்த பதிவு அண்ணா
இங்கு எமது ஆசிரியாகள் ரஹ்மான் பற்றி விசாரிக்கும் ( BAFTA விருதுகள் பெற்றபின்) பொது பெருமையாக இருந்தாலும் தமிழை விட்டு விலகிச் செல்கிறாரோ என்று ஓர் பயம் இருக்கு
February 12, 2009 10:39 PM
A very honest post!
I think ARR has kind of adapted himself or rather best to say his musical style to the expectations of people who work with him as well as to the listeners may be. This could be something that is unavoidable for the artists when they have to give what is mostly wanted by the public.
At the end of the day, all comes under professionalism anyway ;)
Nice post :)
February 13, 2009 5:08 AM
லோஷன்
ரகுமான் காவியக் கவிஞர் வாலியுடன் இணைந்து கலக்கிய காதலர் தினம் பாடல்களை ஏனோ மறந்துவிட்டீர்கள். வைரமுத்து தன் அகம்பாவத்தால் தான் இசைராஜாவுடன் இருந்து பிரிந்தார். பின்னர் ரகுமானுடனும் ஊடல் ஆனால் ரகுமானும் இல்லையென்றால் தனக்கு பாடல் எழுத சந்தர்ப்பம் வராது என அறிந்து மீண்டும் ஒட்டிக்கொண்டார். நா.முத்துக்குமார், பா,விஜய், தாமரை போன்றவர்களின் வரவு வைரமுத்துவை பின்னிற்க்கு தள்ளியது என்னவோ உண்மைதான்.
சிறந்த கவிஞர் ஆனால் சற்றுக்கர்வம் பிடித்தவர். இசைராஜாவும் இதே வகுப்பைச் சேர்ந்தவர்தான். ரகுமானின் வெற்றிகளுக்கு காரணம் சற்றும் கர்வம் இல்லாமையாகும்.
ரகுமானின் பின்னணி இசை ஏனோ இசைஞானி அளவிற்க்கு எடுபடுவதில்லை. சிலவேளைகளில் பிரவீன் மணி போன்றவர்களை இசைஅமைக்க விட்டுவிடுவதாலோ தெரியவில்லை.
இன்றைக்கும் பிஜிஎம் எனப்படும் பின்னணி இசையில் ராஜாதான் ராஜா.
February 13, 2009 8:06 AM
அண்ணா, இன்றும் அந்த நாள் மெலடி பாடல்கள்தான் ரஹ்மானை என் மனதில் உயர்த்தி வைத்துக் கொண்டு இருக்கிறது. slum dog கூட ரஹ்மானுக்காக பார்க்க தோடங்கி, அவரின் ஞாபகமே இல்லாமல் பார்த்து முடித்தது.
February 13, 2009 9:01 AM
Neengal Solvathu mutrilum Unmai Loshan.....
Ennai Poruthavarai Isaigani in Compositions Kalathai Thandiyum Nirppavi
Rahman in isai um kuraithu madhippida mudiaythu Avar Isai Gani endral evar isai puyal....
aanal Puyal Karaiyai kadanthuvidum.....
Gnam endrum manthil padhinthu vidum
Bala
February 13, 2009 9:15 AM
தூர இருந்து மெல்ல பாடலின் தொடக்க இசையினைக் கேட்டாலும் A.R. ரஹ்மானின் இசைலுருவான பாடல் என பலராலும் அடையாலம் கண்டுகொள்ளக்கூடிய இசைதான் A.R. ரஹ்மானின் தனித்துவமான இசை.
பின்னர் அதிலும் மாற்றங்கள் வர ஆரம்பித்தது. இதில் லோக்ஷன் அண்ணா உங்கள் கருத்துக்கு நானும் உடன் படுகிறேன். ஒரு தமிழ் இசையமைப்பாளர் உலக புகழ் பெறுவதை தடுக்க நாம் விரும்பவில்லை. இருப்பினும் அவரின் அந்த தனித்துவமான இசை புயல் தமிழுக்கு தொடர்ந்து ஓயாமல் வீச வேண்டும். இது தமிசையின் ஏக்கம்.
February 13, 2009 10:24 AM
very well written... i too was a die hard rahman fan in the 90's but faded away post 2000's... but still rahman is a legend...
Rahmanal Oscar ku perumai...rahman ku alla!
February 13, 2009 12:03 PM
எங்கள் தானை தலைவர் இசை சுனாமி ஜெயராஜை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாததை கண்டிக்கிறேன்
http://siruthai.wordpress.com/
February 14, 2009 10:45 PM
A.R. RAHMAN ORU ISAI SAHARAM ENPATHAI YARALUM MARRUKKA MUDIYATHU.
BUT, LOSHAN ANNA SONNATHU POL A.R.RAHMAN THAMIZH ISAIKKU KODUKKUM MUKKIYATHTHUVAM KURAINTHUKONDE VARUHIRATHU.
ENNA IRUNTHALUM THAMIZH ISAIYIN POTKALAM A.R RAHMAN 2000 VARAI THANTHA PADALGAL ENPATHAI YARALUM MARAKKA MUDIYATHU.
ORU THAMIZHANAGA A.R. RAHMAN SEITHIRUKKUM SATHANAIGALAI KANDU NAN PERUMAI ADAIHIREN
February 15, 2009 11:06 AM
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamilblogger.com ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த www.tamilblogger.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
tamilblogger குழுவிநர்
February 18, 2009 1:50 AM
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
February 23, 2009 8:42 PM
இந்த பதிவை அப்படியே முதலிலையே எங்கையோ வாசித்த மாரி இருக்கு. நீங்க முதலில் இதை எழுதி திருப்பவும் எழுதினீர்களா?
January 6, 2010 7:30 AM
// தனியே தமிழில் ரஹ்மான் லயித்திருந்தபோது தந்த இசை இனிமையின் தனித்துவம் ஏனோ இப்போது இல்லை என்று நான் கருதுகிறேன்//.
இதே உணர்வுதான் இங்கும்...அண்ணா
//ஆனால் இந்த ரசனை மாற்றம் அவர் உயரத்துக்கு நான் இல்லையோ என்பதும் காரணமாக இருக்கலாம்//
எனக்கும் கூட இதே சந்தேகம் எழுகின்றது....
வழமையாக A .R .R பாடல் கேட்கும்போது ஏற்படும் ஒரு வித மெய் சிலிர்க்கும் அனுபவம் ... எனக்கு இந்த விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்கள் கேட்கும் போது ஏனோ வரவில்லை..;(
January 12, 2010 10:22 PM