சகோதரா முத்துக்குமரா, யார் நீ?

1/30/2009 01:07:00 PM

(40) Comments



சபிக்கப்பட்ட எம் இனத்துக்காக 
சாவை முத்தமிட்டவனே
முத்துக்குமரா 
எமது நீண்டதொரு
விடிவுக்கான யாத்திரையில் 
விதைகளாக விழுந்தோரின் பட்டியலில்
நீயும் இப்போது
ஒருவனாக..

தீக்குளிப்பதை பூக்குவியலில் குதிப்பது போல 
புன்னகையுட ஏற்றுக் கொண்டாயாமே ..
எம் நெஞ்சம் துடித்துக் கலங்கியது..

இன்னொரு தமிழன்.. 
இன்னொரு மனிதன்..
இன்னொரு இன்னுயிர்..
யுத்தமே,இன வெறியே உன் கோரப்பசி 
இன்னும் அடங்காதா?

சகோதரா முத்துக்குமரா,
யாரோ ஒருவனாக
இருந்த நீ நேற்றுமுதல் 
நம்மில் ஒருவனாக..
முகமறியாத உன்னைப் பற்றியே 
நேற்று முதல்
நாமெல்லோரும் உண்மையாகவே 
கவலைப்பட்டோம்

 யார் நீ?
எம்மேல் ஏன் இத்தனை கரிசனம்?
உதிரம் கொடுத்து,உயிர் தந்த 
உன் பெற்றோரைவிடவா
இலங்கையில் இன்னல் பட்டு
தினம்தோறும் 
இறந்துபோகும் எம்
இலங்கைத் தமிழர்
பெரிதாய்ப் போய்விட்டோம்?

தனிப்பெரும் தலைவர்கள்
தானைத் தளபதிகள்
'அம்மா' என்ற பெயரை வைத்துக்கொண்ட
அவமானச் சின்னங்கள்
காந்திவழி நிற்கிறோம் என்று
பெருமை பேசியும்
பிணமாகிப் போகும் தமிழ் சகோதரர் மீது
இரக்கமே காட்டாத
பாசாங்கு அகிம்சாவாதிகள்..
இவர்கள் எல்லாம் வாய்மூடி,
வாய் வீரம் மட்டும் பேசி, 
வசூலையும்,வாக்கையும் மட்டும் தேடி,
தத்தம் நலன் பற்றி மட்டுமே யோசித்து நிற்கையில் 
நீ மட்டும் ஏன் இப்படி?

உன் குடும்பத்தின் கதி?
எத்தனையோ இலங்கைத் தமிழருக்கே 
இல்லாத உணர்வு 
உனக்கு வந்ததே..
ஆனால் உயிரின் மதிப்பு உனக்குத் தெரியாததா?

உன் இறுதி அறிக்கை பார்த்தேன்.
உணர்ச்சிவசப்பட்டு உயிரை தீக்கு இரையாக்கி 
நீ தியாகியானாய்..

ஒரு சில தினங்களில் 
மற்ற தியாகிகள் எங்கள் வாழ்வில்
எம்மக்களால் எப்படி மறக்கப் பட்டனரோ
அப்படியே உன்னையும் மறந்து விடுவர்..

போரும்,அழிவும் தொடரும்.. 
புலம்பெயர்வும்,அகதி அவலமும் தொடரும்..
ஈழத்தில் இறுதி தமிழன் அழிந்த பிறகும்
உங்கள் தமிழ்நாடு தமிழனை வாழவைக்கும்..

எங்கோ ஒரு புலம்பெயர் தேசத்தில் 
எதோ ஒரு மூலையில்
யாரோ ஒருவன் உன் பெயர் சொன்னால் 
அப்போது நானும் மகிழ்வேன்..

ஒவ்வொரு தமிழனின் உயிரும் முக்கியமே..
எமக்காக அநியாயமாக மாயாதீர்..
திருந்தாத அரசியல் ஜென்மங்கள்-இரங்காத தலைமைகள்
உங்கள் இறப்பினாலும் திருந்தாது..

நாளை தமிழன் விடிவுக்காக 
இன்று உங்கள் குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வருவதா?

வேண்டாம் தற்கொலைகள்.. தீக்குளிப்புக்கள்..

பல மரணம் பார்த்துவிட்டோம் இங்கே..
அங்கேயும் வேண்டாம் உயிர்ப் பலிகள்..



வேதனையான இன்னொரு விடயம், இன்று இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நினைவுதினம்.. எத்தனை பேருக்கு இது ஞாபகமோ?

நேற்றொரு தியாகம், இன்று இந்தியாவில் தியாகிகள் தினம்.. இனியும் வேண்டாம் தற்கொலைத் தியாகங்கள்.. நடப்பது நடக்கட்டும்..



40 Responses to "சகோதரா முத்துக்குமரா, யார் நீ?"

  • tamil cinema

    ஒவ்வொரு தமிழனின் உயிரும் முக்கியமே..
    எமக்காக அநியாயமாக மாயாதீர்..
    திருந்தாத அரசியல் ஜென்மங்கள்-இரங்காத தலைமைகள்
    உங்கள் இறப்பினாலும் திருந்தாது..

    நாளை தமிழன் விடிவுக்காக
    இன்று உங்கள் குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வருவதா?

    உங்கள் கவிதை அஞ்சலி படித்தேன். என்ன எழுதுவது... எல்லாமே சொல்லி விட்டீர்கள்...

    தமிழக அரசியல் தலைவர்கள் திருந்தாத வரையில் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது.

  • ஆதிரை

    :(

  • வதீஸ்வருணன்

    சுயநல மானுடருள்
    பிறர்நலம் கொண்டவனே
    அழிந்து கொண்டிருக்கும்
    ஈழத் தமிழனுக்காய்
    உன்னுயிரை ஈய்ந்தவனே குமரா
    செய்திகேட்டு துடித்ததடா எம் நெஞ்சம்

  • Vaanathin Keezhe...

    நான் எழுத நினைத்த எல்லாமே உங்கள் வார்த்தைகளில் வந்து விழுந்திருப்பதைக் கண்டேன். விழியோரங்களில் இருதுளிக் கண்ணீர்...

    இந்த தியாகமும் வீணாத்தானே போகும் என்ற நினைப்பே பாரமாய்...
    தமிழன் சாகப் பிறந்தவன் என்ற வரலாறு படைத்துவிட்டானே சகோதரா...!
    -என்வழி

  • பிரதிபலிப்பான்

    எனது அன்பு சகோதரனுக்கு என் மவுனஅஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்.

  • தியாகி

    வேதனை சுமந்து வந்த தியாகம்.எமக்காக இன்னுயிர் நீத்த அவருக்கு என் அஞ்சலி.

  • ஹேமா

    மரணங்கள் என்றால் கேள்விப்பட்டலோ பார்த்தாலோ பயந்த காலங்கள் போய் மரணங்களே எங்கள் வாழ்வாய் வரங்கள் கேட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
    இனியும்....?

  • கமல்

    தீக்குளிப்பதை பூக்குவியலில் குதிப்பது போல
    புன்னகையுட ஏற்றுக் கொண்டாயாமே ..
    எம் நெஞ்சம் துடித்துக் கலங்கியது..//


    லோசன் நாங்கள் என்ன சபிக்கப்பட்ட இனமா?? எமக்கு மட்டும் ஏன் இப்படி??? இனியும் வேண்டாம் இந்த உயிர்ப் பலிகள்?? தமிழன் பூண்டோடு அழிந்தால் தான் யுத்தமில்லா வாழ்வு வருமென்று யாரும் நினைத்தால் எல்லாத் தமிழர்களையும் ஒன்றாக அழைத்து அவர்கள் மீது அணு குண்டொன்றை வீசிக் கொல்ல வேண்டியது தானே? பிறகு ஏன் இப்படி அணு அணுவாக எம்மை எல்லாம் இப்படித் துடிக்கத் துடிக்க வைத்துக் கொல்ல நினைக்கிறார்கள்???

  • Anonymous

    'அம்மா' என்ற பெயரை வைத்துக்கொண்ட..

    காந்திவழி நிற்கிறோம்...

    தேவையற்ற சீண்டல்கள்

  • வாமுகோமு

    கனவுகளையும் , கேள்விகளையும் வீசிவிட்டு , மனமிருந்தால் , நெஞ்சில் நீதியிருந்தால் , பெருந்தலைவர் வழி நடப்பவானாயிருந்தால் துன்பப்படும்
    தமிழனுக்கு ஏதாவது செய் , அன்றேல் செத்துமடி என்பதை சொல்லாமல்
    சொல்லி தன் இன்னுயிரை ஈழத்திற்க்காக ஈந்த தமிழனை பெற்றெடுத்த தாய்
    தந்தையை மானமுள்ள தமிழனாய் இருந்தால் வணங்குவோம்.

    கவலைப்படாதே உன் மகன் இல்லையென்று , ஈழம் கிடைத்தால் அனைவரும்
    உன் பிள்ளைகள் , உன் நாடு என பெருமிதம் கொள்ளலாம் ,அதுவரைக்கும்
    காத்திரு !

  • Anonymous

    I am getting angry only to know what he did. Heart refusing to cry. I would have respected him if he has joined the freedom fighters and died. What he did was stupidity. I cant believe you guys encouraging others by praising him. I have more reasons to get mad at him but I am not able to express all my thoughts here. It really hurts to know someone being so stupid for killing himself like this. It is hurting more to think how many stupids going to do it more.

  • Anonymous

    இன்னுயிர் நீத்த அவருக்கு என் அஞ்சலி

  • Anonymous

    He dead to make our life bright
    Plz anonymous understand this.
    Until something happened like this any of indian politician doesn't care about us.
    hats off to muthukumar.
    :(

  • Thusha

    வேதனைகள் மட்டுமே எங்கள் உடன்பிறப்புக்கள், நாங்கள் பெற்றுக் கொண்டவற்றை விட இழந்தவை அதிகம் அதில் இன்று நிங்களும் ஒருவராய்,
    இறைவன் கூட அறிவனோ தெரியாது தமிழனுக்கு எப்போது விடிவு வரும் என்று
    உங்களின் ஆத்மாக்கு என்றும் நாம் தலை வணங்குவோம்

  • ஈழச்சோழன்

    தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரையின் அஞ்சலிக்கவிதை…

    முத்துக்குமரா!
    முகம் தெரியாப்போதினிலும்
    செத்துக்கிடக்கின்றாய் எமக்காக,
    எனவறிந்து
    தேகம் பதறுகிறதே திருமகனே!
    உந்தனது,
    ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே
    நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ
    உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி
    நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்
    அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.
    உன் மேனியில் மூண்ட நெருப்பு
    உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார்
    நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.
    சின்ன அக்கினிக்குஞ்சே!
    உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்
    அந்தச்சோதிப்பெருவெளிச்சம்
    எமக்குச்சக்தி தரும்
    வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும்.
    உன் இறுதி மூச்சு
    புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும்.
    எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி
    உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.

    தம்பி!
    வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.
    நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல
    எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார்
    இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன்.
    உன் குரலைக் கேட்கிறேன்.
    உன் மூச்சை உள் வாங்குகிறேன்.
    இடையில் கடல்கடந்தும் வருகின்றது.
    உன் சிரிப்பின் ஓசை.
    எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?
    கடலிலே அனுப்பி வையுங்கள்
    அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,
    ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,
    கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச.

    மகனே!
    நெருப்பெரியும் தேசத்தை எண்ணி
    நெருப்பில் எரிந்தவனே !
    உன்நெஞ்;சின் உணர்வுகளை வாங்கி
    இங்கே உயிர்கள் பிறக்கும்
    உன் இறுதி மூச்சை உள்வாங்கி
    உயிர்கள் சுவாசிக்கும்
    நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு
    எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர்
    உயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது
    ஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி
    நிமிர்ந்துள்ளோம் நாங்கள்.
    முத்துக்குமார்,
    நீ செத்துக்கிடக்கின்றாயாமே எமக்காக
    யாராவது அவனின் புனித உடலை
    எமக்கு பொதிசெய்து அனுப்பமாட்டீர்களா?
    இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக
    அந்த வித்துடல் வேர் பிடித்து
    புதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக.

    தம்பி!
    வார்த்தை ஏதும் வரவில்லையே
    உன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக
    தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது
    உன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து
    நெஞ்சுருகி உன்னைப்பாடுகின்றது தமிழீத்தமிழ்.

    நண்பனே!
    முகம் தெரியாத எம்முத்துக்குமார்
    உன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம்.
    நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது
    விண் தொட எழும் - அந்த வெளிச்சத்தில்
    நாங்கள் ஒளி பெறுவோம் .
    என் பிரிய உறவே!
    சென்று வருக
    திரும்பி வராவிட்டாலும்
    நன்றியென்ற ஓருணர்வை
    நாம் சுமந்து நிற்கின்றோம்.
    பிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம்

    தமிழீழத்திலிருந்து புதுவை இரத்தினதுரை

  • Anonymous

    உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன்.. இன்று காலை உங்கள் நிகழ்ச்சியை கேட்கும்போதே இன் நிகழ்வு எவ்வளவு தூரம் உங்களை பாதித்திருக்கிறது என்று தெரிந்தது.. ஒரு உயிரின் இழப்பு எவ்வளவு பெரிய விஷயம்.. அவ் இறப்புக்கு பின் அவன் குடும்பத்தின் நிலை என்ன.. இதே வேளை எனக்கு விடை தெரியாத ஒரு கேள்வி.. தற்கொலை தாக்குதல்களில் இழக்கப்பட்டதும் உயிர்களே.. அது தமிழ் உயிராயினும் சிங்கள உயிராயினும்.. கதிர்காமர் உயிராயினும்..மாத்தையாவின் உயிராயினும்.. தமிழ் செல்வனின் உயிராயினும்.. காத்தான் குடியில் நிகழ்ந்ததாயினும்.. செம்மணியில் நிகழ்ந்த தாயினும்.. கெப்பிட்டி பொல இல் நிகழ்ந்த தாயினும்அவ்வுயிர்கள் இழப்பு துக்கப்படாமல் கொண்டாடப்பட்டது.. ஒரு கிரிக்கெட் போட்டிபோல் ஸ்கோர் பார்க்கப்பட முடிந்தது? அது ஒரு இலங்கை உயிர் என்பதாலா? நீங்கள் பிறப்பது எங்கு என்று நீங்கள் முடிவு செய்யவில்லை.. நீங்கள் வாழவது எங்கு என்றும் உங்களால் முடிவு செய்ய முடியவில்லை.. இடையில் எங்கிருந்து வந்தது நிலம் மீதான் ஆதிக்க வெறி? புதிய நாடு என்பது புதிய தலைவர் ஒருவருக்கும் சில அமைச்சர்களுக்குமே.. இதன் யதார்த்தத்தை உணர்வோம்.. வீண் இழப்புகளை நிறுத்துவோம்..

  • தேனீ

    சொல்ல‌ வார்த்தை இல்லை, என் ச‌கோத‌ரா.

    கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் எங்க‌ள் உயிர்த் தீப‌ங்க‌ளில் என்றென்றும் அணையாத‌ ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் நீ.

    என் செய்து உன் தியாக‌த்தின் க‌ட‌ன் அடைப்ப‌து?????

  • ragu

    நாங்கள் ஒரு பத்திரிகையாளனை இழந்துவிட்டோம்
    ஒரு தன்னலமில்லா தமிழனை இழந்துவிட்டோம்
    ஒரு பேச்சாளனாக புரட்சி தூண்டும் எழுத்தாளனாக வரவேண்டிய சகோதரனை இழந்துவிட்டோம்

    ஒரு வருங்கால தலைவனை இழந்து நிற்கிறோம்

    ஆம் முத்துகுமரா நீ ஒரு தன்னலமில்லாத் தலைவனாக உருவாகி இருக்க முடியும் அதற்குள் அவசரப் பட்டுவிட்டாய்.

    உன் குடும்பம் மட்டும் அல்ல ஒரு தமிழினமே ஒரு தன்னலமில்லா தலை மகனை இழந்து விட்டது. உனக்கு எனது வீர வணக்கம்

    ரகுநாதன்

  • கலை - இராகலை

    //எங்கோ ஒரு புலம்பெயர் தேசத்தில்
    எதோ ஒரு மூலையில்
    யாரோ ஒருவன் உன் பெயர் சொன்னால்
    அப்போது நானும் மகிழ்வேன்..///

    எம் கண்ணீர்
    துளி
    சிப்பிக்குள்
    வீழ்ந்து,
    பல நூறு
    முத்து க்களாய்
    வெளிவரும்

  • Anonymous

    முத்துகுமாரின் இறுதி அறிக்கை இங்கே ஆங்கிலத்தில் மொழி பெயர்கபடுளது.

    http://www.tamilnet.com/art.html?catid=79&artid=28208

    நன்றி

  • derby

    thoothukudyin uyarntha muthae
    eeza uravugalin innuyir kakka thanuyirai thuchamena maaithaye,

    engal ullam erinthathu, vayiru erinthathu ,aanal udalum sernthu erinthathu uthaman unakku mattmae,

    nee muthalvanaga thaguthiyudaya tamizan, maanamulla thamizan , athanalthan innuyirai maaithukondai.

    ini intha mannin veppam un kadaisi moochu katrin thodarchiye.....

    bharthi kooriyathu pol, "AGNI KUNJONRU KANDANE...." ATHU NEEYE
    sagothara....

    nee ini en makkal ullam , intha maanilam, mozi anaithilum kalanthiruppai.....

    thiyagathai muthalil naan parthathu ippothuthan...

    unakku enathu veera vanakkam.....

    ini OCTOBER 29 "TAMIL THIYAGI DINAM"
    ITHU VARALATRAI MINCHIYA NIGAZVU...
    MEENDUM EN SAGOTHARANANA UNAKKU ENGAL VEERA VANAKKAM

    VAAZGA TAMIZ.... VELLATTUM TAMIZINAM
    NANRI
    GUINDY SIVASANKAR

  • thillaisivasankar

    தூத்துக்குடியின் உயர்ந்த முத்தே ஈழா உறவுகளின் இன்னுயிர் காக்க தன்னுயிரை துச்சமென மாய்தாயே,எங்கள் உள்ளம் எரிந்தது, வயிறு எரிந்தது ,ஆனால் உடலும் சேர்ந்து எரிந்தது உத்தமன் உனக்கு மட்டமே,நீ முதல்வனாக தகுதியுடைய தமிழான், மானமுள்ள தமிழான் , அதனாலதான் இன்னுயிரை தியாகம் செய்தாய் . இனி இந்த மண்ணின் வெப்பம் உன் கடைசி மூச்சு காற்றின் தொடர்ச்சியே.....பாரதி கூறியது போல், "அக்னி குன்ஜோன்று கண்டனே...." அது நீயே சகோதரா ....நீ இனி என் மக்கள் உள்ளம் , இந்த மாநிலம், மொழி அனைத்திலும் கலந்திருப்பாய்.....தியாகத்தை முதலில் நான் பார்த்து இப்போதுதான்...உனக்கு எனது வீர வணக்கம்.....இனி அக்டோபர் .29. "தமிழ் தியாகி தினம்"இது வரலாற்றை மிஞ்சிய நிகழ்வு...மீண்டும் என் சகோதரனான உனக்கு எங்கள்
    வீர வணக்கம்
    வாழ்க தமிழ்.... வெல்லட்டும் தமிழினம்
    கனத்த நெஞ்சத்துடன்
    கிண்டி சிவசங்கர், நம்பி

  • thevanmayam

    ஒரு சில தினங்களில்
    மற்ற தியாகிகள் எங்கள் வாழ்வில்
    எம்மக்களால் எப்படி மறக்கப் பட்டனரோ
    அப்படியே உன்னையும் மறந்து விடுவர்.///

    மறக்கவும் மறந்து இருக்கவும் முடியாத மனிதன் முத்துக்குமார்...
    தேவா....

  • Sinthu

    நம் நாட்டவருக்கே
    இல்லாத தைரியம்
    கண்டேன் உங்களிடம்
    உங்களை பற்றி
    பேசவே நாதியற்றவளாக..
    நமக்காக எழுதப்பட்ட
    விதி இது தான்
    என்ற போதும் கூட
    நமக்காக.
    செய்தி அறிந்த நேரம்
    தாமதம்
    அதன் பாதிப்போ
    நிரந்தரம்

    எப்படி நன்றி சொல்ல
    எத்தனை உயிர்களை இழந்தோம்
    அநியாயமாக இன்னொரு உயிரா..?
    அந்நியன் என்றிருந்த நீங்கள் அண்ணனாக


    பதிவுக்கு நன்றி லோஷன் அண்ணா..
    சாபம் தான் எப்பவுமே மாறாதது...

  • Thooya

    :(

  • Anonymous

    இவர் பத்திரிகை அலவலகத்தில் அச்சு கோர்பவர். இவர் பத்திரிக்கையாளர் என்பது தவறாகும்..

  • Subankan

    நமக்காக ஒருவன், அஞ்சாதே என் ச‌கோத‌ரா,அங்கேயும் இருக்கிறார் எம்மவர் உன்னை வரவேறக!

  • LOSHAN

    எங்கள் அனைவரின் உணர்வுகளின் ஒன்றே.. நன்றி நண்பர்களே.. உங்கள் வருகைகளுக்கும் கருத்துப் பரிமாறல்களுக்கும்..

    எனது மனதில் எழுந்த சோகமெல்லாம் இன்னும் முழுக்க வடிஇந்து போகவில்லை.. என்ன இருந்தாலும் ஒரு உயிரும் எங்களுக்கு உயிர் தானே..

    இனி மேலும் அநியாயமாக எந்த உயிரும் பலியாகக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்..

    //Anonymous said...
    'அம்மா' என்ற பெயரை வைத்துக்கொண்ட..

    காந்திவழி நிற்கிறோம்...

    தேவையற்ற சீண்டல்கள்//

    இல்லை.. சீண்டவல்ல.. அந்த வரிகள் உண்மையாka மனதின் குமுறல்,கோபத்திலிருந்து வந்தவை..

    பொறுபற்ற விதத்தில் செயற்படும் அவர்கள் என் கண்டனத்துக்குரியவர்களே..
    அவர்கள் ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை.. முட்டாள்தனமாக,மூர்க்கத்தனமாக எதிர்த்து வருவது வேதனையும்,ஆத்திரமும் தருகிறது..

    புலிகளை எதிர்த்தாலும்,குறைந்தபட்சம் தமிழருக்காக ஆவது?

  • Anonymous

    // Anonymous said...
    இவர் பத்திரிகை அலவலகத்தில் அச்சு கோர்பவர். இவர் பத்திரிக்கையாளர் என்பது தவறாகும்..
    //

    அன்புள்ள அனானி,
    தயவு செய்து கீழுள்ள மஇணைய முகவரியில் சென்று முத்துக்குமரன் தன் கைப்பட எழுதி வினியோகித்த துண்டுப்பிரசுரத்தைப் படிக்கவும்.

    http://www.techsatish.net/

    அதில் அவரே தான் ஒரு பத்திரிகையாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    நல்லாக் கெளம்பீட்டாங்கைய்யா... குத்தம் கண்டுபிடிக்கிறதுக்கு

  • LOSHAN

    அவர் ஊடகவியலாளரா,பத்திரிகையாளரா என்ற ஆராய்ச்சியெல்லாம் ஒருபுறம் வையுங்கள்..ஒரு மனிதன்..ஒரு உயிர்..

    அடுத்தது.. வாய்ப்பு இருந்தும் மனிதாபிமானதுக்காகக் குரல் கொடுக்காமல் இருக்கும் பல பத்திரிகையாளர்களை விட சகோதரன் முத்துக்குமார் எவ்வளவோ மேல்..

  • காரூரன்

    *\\வேண்டாம் தற்கொலைகள்.. தீக்குளிப்புக்கள்..


    பல மரணம் பார்த்துவிட்டோம் இங்கே..
    அங்கேயும் வேண்டாம் உயிர்ப் பலிகள்\\*

    அருமையான பதிவு நண்பரே!

    உண்மைதான். மரணித்தவர்களை கௌரவிப்பது மனித நேசம் தானே!
    அவர் தன் மரண வாக்கு மூலத்திலும் நிதானமாக பேசியிருப்பது அவர்
    மன உறுதியை வெளிப்படுத்துகின்றது.

  • Anonymous

    தாக்குதல்களில் இழக்கப்பட்டதும் உயிர்களே.. அது தமிழ் உயிராயினும் சிங்கள உயிராயினும்..

    தாயினும்அவ்வுயிர்கள் இழப்பு துக்கப்படாமல் கொண்டாடப்பட்டது.. ஒரு கிரிக்கெட் போட்டிபோல் ஸ்கோர் பார்க்கப்பட முடிந்தது?

    அது ஒரு இலங்கை உயிர் என்பதாலா?

  • Anonymous

    சினிமா முயற்சியில் இயக்குநர்கள் பலரைச் சந்தித்தும் பலனில் லாமல் போனதால்… கடந்த இரண்டு மாதங்களாக பா.ம.க. தலைவர் ராமதாஸின் மகள் கவிதா நடத்தும் ‘பெண்ணே நீ’ என்கிற மகளிர் மாத இதழில் பணியாற்றி இருக்கிறார்.
    ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில பேசாம தமிழ் மேல வெறி பிடிச்சு அலைஞ்சு, எந்த நேரமும் ஈழத்தைப் பத்தியே பேசி, கடைசியில ஒரு எழவும் நடக்காம போன வருத்தத்துல உயிரையே விட்டுட் டான்.
    விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பல்வேறுபட்ட புகைப்படங்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்.

    வறுமையில பொறந்தவன் உலகத்தைப் பத்தியெல்லாம் ஏன் கவலைப்படணும்? என் முதல் பையனுக்கு மோனேஷ்னு பேரு வச்சோம்.

    தமிழ்ல பேரு வைக்காததால அவனுக்குக் கோபம் வந்துடுச்சோ என்னவோ… கொஞ்ச நாள் எம் பையனோட பேசாம இருந்தான்
    பெரும்பாலும் எங்ககிட்ட சரியா பேச மாட்டான்
    பதினோராம் கிளாஸை பாதியிலேயே விட்டுட்டான்
    விகடன்

  • Anonymous

    புலிகளை எதிர்த்தாலும்,குறைந்தபட்சம் தமிழருக்காக ஆவது?

    இந்த கோணத்தில் சிந்தித்தால் முன்னெடுப்புகளை மேற்கொண்டால் மட்டுமே தமிழர்க்கு விடிவு,..

  • பிரபா

    இதுவரையும் இழந்தது போதும் இனியும் வேண்டாம் இத் தியாகம்.

  • Ramanan

    முத்துக்குமரனின் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • சுபானு

    //ஒவ்வொரு தமிழனின் உயிரும் முக்கியமே..
    எமக்காக அநியாயமாக மாயாதீர்..
    திருந்தாத அரசியல் ஜென்மங்கள்-இரங்காத தலைமைகள்
    உங்கள் இறப்பினாலும் திருந்தாது..

    அரசியல் தலைமைகள் அவனது தியாகத்தையும் தமது அரசியல் நலனுக்காய் பயன்படுத்த முனைவதே மிகவும் வேதனையான ஒன்று... :(

  • Anonymous

    Loshan, some one has mentioned about your website in a Canadian popular news web site.

    http://network.nationalpost.com/np/blogs/toronto/archive/2009/01/30/tamil-protest-briefly-paralyzes-downtown.aspx

  • Anonymous

    முத்துகுமாருக்கு வீர வணக்கம்.
    ---------------------
    அணையப் போவதாய்
    எண்ணிக் கொண்டிருந்த
    இனநெருப்பை பற்றவைத்த
    அக்கினிக்குஞ்சு நீ!

    ஆம்!உன் தாய் தமிழச்சி தான்
    உயிரை துச்சமென மதிக்கும்
    விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க
    ஓர் தமிழச்சியால் தானே முடியும்...
    நீ தூத்துக்குடிதான்
    கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...

    முராரியால்
    பூபாளம் பாடிய
    புதிய வரலாறு நீ!

    அவர்கள் புலியாய் போரிடுகின்றனர்
    நீ ஒளியாய் போரிட்டாய்
    நாங்கள் வாய்மொழியாலாவது
    போரிட வேண்டாமா?

    முத்துக்குமார் தமிழ்க்கடவுள்
    என்றனர் நம்பவில்லை...
    முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக
    இருக்க முடியும்
    இப்போது நம்புகிறேன்...

    நீ எழுதி வைத்த மரண ஓலைதான்
    இனி எங்கள்
    புதிய புறநானூறு!

    பல அரசியல் வாதிகள்
    பிணங்களாய்ப் போனார்கள்....
    நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!

    தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங்
    தீயை முத்தமிட்டாய் நீ!
    அன்று இந்தியா கிடைத்தது...
    நாளை ஈழம் கிடைக்கும்!

    வீர வணக்கத்துடன்
    Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
    அறந்தாங்கி.

  • "கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran]

    தியாகங்கள் அத்தனையும் தாண்டி மனிதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது உங்கள் படைப்பு... அதற்காக என் மனமார்ந்த நன்றிகள்.

    முத்துக்குமாரின் முயற்சி பெரும் மாற்றத்திற்கு விதையாகும் என்ற நம்பிக்கை
    பெருந்தலைவர்கள்(?????) ஏற்படுத்திய புயலில் சிக்கி சின்னபின்னமாகி போனது...

    கடைசியில் மிஞ்சியிருப்பது என்னவோ... ஒரு நல்ல குடிமகனின் பேரிழப்பும்...
    அந்நெருப்பில் குளிர்காய துடிக்கும் தலையில்லா தலைவர்களின் கூட்டமும்தான்...


Post a Comment

Related Posts with Thumbnails

சொடுக்கி இணைக்க...



Creative Commons License
LOSHAN - லோஷன் by A.R.V.Loshan is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.