அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்!

12/23/2008 11:48:00 AM

(23) Comments

அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்!
அண்மையில் வெளிவந்த வில்லு திரைப்படப் பாடலொன்றின் வரிகளில் மனதில் நங்கூரமிட்டு நின்று கொண்ட வரிகள் இவை!

வழமையான ஹீரோ அறிமுக/பில்டப் பாடல் தான் இது!
விஜய்க்கான வரிகளோடு இந்த வரிகளும் இடைநடுவே இசை ஒய்ந்து ஒலிக்கும் போது,முதல் தடவை கேட்டபோதே மனதை நெருடியது வருடியது!

இளையதளபதி தனது ரசிகர்களுக்குப் பாடல்கள் மூலமாக MGR பாணியில் உணர்ச்சியூட்டுவார்;உசுப்பேற்றுவார்!

அவரது அண்மைக்கால அரசியலுக்கான ஆயத்த அதிரடிக்கிடையில் இலங்கைத் தமிழரின் பிரச்சினையில் இந்திய அரசைத் தலையிடக்கோரி தந்தி அனுப்பச் சொல்லியும் பின் தன் ரசிகர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மூலமாகவும் இலங்கைப் பிரச்சினையிலும் தான் அக்கறையுடையவர் என்பதையும் காட்டியிருந்தார்.

இலங்கையிலும் ஏராளமாக உள்ள விஜய் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் மற்ற முன்னணி இளம் நடிகர்கள் குரல் வெளிப்படையாகக் கொடுக்காத போது தம் இளையதளபதி முன்வந்து நின்றது பெருமிதத்தையும் கொடுத்திருந்தது.

இந்த வேளையில் தான் 'வில்லு' படப் பாடல்களும் வெளியாகின! (படமே பாதிக்குப் பாதி என்று இணையத்தில் வெளியாகிட்டுது – சினிமாலையில் ஞாயிறன்று அதிர்ச்சித்தகவல் கொடுத்திருந்தேன்)

தேவிஸ்ரீ பிரசாதத்தின் இசையில் ஒரு bit பாடல் உட்பட 8 பாடல்களும் வகை வகையாக இருந்தபோதும் எங்கள் பலபேருக்கும் பிடித்துப் போனது 'ராமா ராமா' என்ற இந்தப் பாடல் தான்!

'அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்' என்ற இந்த வரிகள் தான் இந்தப் பாடலின் ஹிட்டுக்குக் காரணம் என்று சொல்லவும் வேண்டுமா?

பாடல் வரிகளை கவிஞர் கபிலன் எழுதியிருக்கிறார்.விஜய்க்காக அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக ஹீரோ அறிமுகப்பாடல்களை கபிலன் தான் எழுதி வருகிறார்.  

இப்படிப் பாடல் எழுதியவுடன் ஈழம் வந்துவிடுமா? அல்லது அகதி மக்கள் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்று குதர்க்கமாக கேட்கக் கூடாது! நமக்காகவும் சிந்திக்க கொஞ்சமாவது அக்கறைப்பட ஆதங்கப்பட கவி வடிக்க சகோதரர்கள் இருக்கிறார்களே என்று மனமகிழ்வடைவோம்!

வியாபாரச் சந்தைகளாக மட்டுமல்ல வேதனைகளின் விளை நிலமும் எம்மவர் வாழுமிடங்கள் என்பதனை சர்வதேச அகதிகளான எம்பற்றி ஒரு சில பாடல்கள் வந்தாலும் அவையும் வரலாற்றுப் பதிவுகளாகட்டும்.

இதுபோலவே ஈழம் பற்றி ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி வந்த திரைப்பாடல்கள் பற்றி யோசித்த போது.....

(1)ஞானப்பழம் - யாருமில்லாத தீவொன்று
எழுதியவர் - பா விஜய்
இசை – கே பாக்யராஜ்
பாடியவர்கள் - உன்னிகிருஷ்ணன், சுஜாதா

'ஈழத்தில் போரோய்ந்து தேன்முல்லைப் பூப் பூத்து நீ சூட்டத் தரவேண்டுமே'

ஒரு பத்திரிகையாளனாக வரும் கதாநாயகன் காதல் பாடலிலும் சமூக உணர்வை வெளிப்படுத்துவதாக வரிகள் அமைந்திருக்கும்.

ரொம்பவே இசைக்காகவும் வரிகளுக்காகவும் சிலாகிக்கப்பட்ட பாடல் இது.


(2) பூவெல்லாம் உன் வாசம் - புதுமலர் தொட்டு
எழுதியவர் - வைரமுத்து
இசை – வித்யாசகர்
பாடியவர் - ஸ்ரீராம் பார்த்தசாரதி
'இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து'
காதல் வருவதை முன்னிட்டு ஒயாத சிலவற்றை நிறுத்தச் சொல்லி கவிஞர் சொல்லும் காதல் பாடல் இது!

ஒயாத ஒன்று கருதப்பட்ட இலங்கை உள்நாட்டுப் போர் கூட இந்தத் திரைப்படம் வெளிவந்த போது நின்று தற்காலிக சமாதானம் ஏற்பட்டது ஒரு ஆச்சரியம் தான்!

(3) விடை கொடு எங்கள் நாடே – கன்னத்தில் முத்தமிட்டால்
எழுதியவர் - வைரமுத்து
இசை – ஏ ஆர் ரஹ்மான்
பாடியோர் - எம் எஸ் விஸ்வநாதன்,மாணிக்க விநாயகம்,பல்ராம்,ரைஹானா

பாடல் முழுவதுமே ஈழத்தமிழத்தின் துயர் பற்றி இடப்பெயர்வின் துயர் பற்றி சொந்த மண்ணை சொந்தங்கள் விட்டு அகதிகாளகப் புலம்பெயரும் அவலம் பற்றியே ஒலக்குரலாயப்பாடல் ஒலிக்கிறது.

எப்போதும் கேட்டாலும் கண்கலங்கும் (படமாக்கும் விதத்தில் தான் மணிரத்னம் ஈழத்தமிழரின் மனதை ஈர்க்கவில்லை என்று நினைக்கிறேன்)
ஒரு நாளில் இந்தப்பாடல் கேட்டால் பாடலில் வருகின்ற ஓலமும்,மாணிக்க விநாயகம் குழுவினரின் கோரசும் நாள் முழுவதும் மனதில் நின்று காதில் ஒலித்த வண்ணம் இருக்கும்.

உயிர்தொடும் வரிகள் வைரமுத்து தந்தார் என்றால் உருக வைக்கும் இசையில் இளகி வைத்தவர் ரஹ்மான்.  

ஒருமுறை பிரபல பின்னணிப்பாடகா' மாணிக்கவிநாயகம் இலங்கை வந்திருந்த நேரம் அவரை நான் பேட்டி கண்டுகொண்டிருந்தேன். இந்தப் பாடலைப் பாடக் கேட்டேன். பாடிக் கொண்டிருந்தவர் பாடலின் வரிகளோடு ஒன்றி விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டார்;.

(4)நந்தா - கள்ளியடி கள்ளி
எழுதியவர் - தாமரை
இசை – யுவன் ஷங்கர் ராஜா
பாடியோர் - அனுராதா ஸ்ரீராம்,மதுமிதா 

அகதியாக வந்து இந்தியக் கரை சேர்த்த ஒரு கன்னிப் பெண்ணின் முதல் காதல் அனுபவப் பாடல்!

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையும் அழகாகக் கையாண்டு அகதிக்குக் காதல் வருவதை அற்புதமாக வடித்திருப்பார் தாமரை.

'எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்று தான்; தமிழன் தமிழன் தான்
என்ற வரிக்கும் தொடர்ந்து ஒரு சிறுமியின் குரலில் வரும் 
'புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா
என்ற வரிகளும் ஒரு வித ஏக்கம் தருபவை.

'நமது உறவுகள் நமது நாட்டில் என்று நினைப்பது தவறு
இங்கும் உறவுகள் உள்ளது
தாமரை சொல்பவற்றை இன்று வரை தமிழக அன்பு நெஞ்சங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

5.ராமேஸ்வரம் - எல்லோரையும் ஏற்றி
எழுதியவர் - கபிலன் 
இசை – நிரு (பிரான்ஜில் வசிக்கும் இலங்கையர்)
பாடியவர்கள்- மாணிக்க விநாயகம்,ஹரிச்சரன்,சூர்யா,ரேஷ்மி 

ராமேஸ்வரம் அகதிமுகாமில் வாழும் மக்கள் தங்கள் ஏக்கங்கள் எதிர்ப்பார்ப்புக்களைச் சொல்வதாய் அமையும் பாடல்!

பல யாழ்ப்பாண மொழிச் சொற்கள் பாடலில் மிகப் பொருத்தமாக நினைவுகளை மீட்டிப் பார்க்கும் விதமாக அமைகின்றன.

'எல்லோரையும் ஏற்றிப் போகக் கப்பல் வருமா'
'அட தூரம் கையில் வருமா - இல்லை ஈரம் கண்ணில் வருமா'
நல்லூர்க் கோவில் நாயனம்,புகையிலை,தங்கச்சி,பனைமரம்,பகிடி,புட்டு,தேங்காய் சம்பல்,சொதி என்று யாழ்ப்பாணச் சுவைகளைத் தொட்டு வைக்கிறது பாடல் வரிகள்.

'எங்கள் பூமி தீயின் வசமோ'
என்று அவநம்பிக்கைகளை நம்பிக்கையின் கூறுகளாக மாற்றிக் காட்டியுள்ளது பாடல்!

திரைப்படம் மனதைத் தொடாததால் பாடலின் ஆயுளும் வானொலியோடு போயிற்று.

இதுபோலவே ராமேஸ்வரம் திரைப்படத்தில் இன்னுமொரு பாடல் 

நா.முத்துக்குமார் எழுதிய "நேற்றிருந்தோம் வீட்டினுள்ளே" என்ற பாடல்..
O.S.அருண் பாடியது.. 
மனதை உருகவைக்கும் இசையோடு O.S.அருணின் சோகக் குரலும் இழையும் பொது இலங்கையின் வட கிழக்கில் அன்று கேட்ட பல பாடல்கள் எனது நினைவுக்கு வருகின்றன..

"உயிரை அங்கே வைத்தோம் அதனால் உடலை சுமக்கிறோம்"
என்ற வரிகள் புலம் பெயர்ந்து வாழ்வோர்,அகதிகள் மனதில் இன்னுமே தத்தம் தாயக பூமிகளை சுமந்து கொண்டிருப்பதை அழகாக வடிக்கிறது.

முத்துகுமாரின் வரிகளின் கனலும்,ஏக்கமும் ஈழத் தமிழ்ரின் ஏக்கங்களைத் தாங்குகின்றன
"நடந்தது எல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா?
நாளைக்காவது எங்கள் குழந்தை நலமாய் வாழாதா?
அத்தனை வழியையும் பொறுப்போம்
அதுவரை உயிருடன் இருப்போம்"

முத்தாய்ப்பு வரிகள்.. முடிவிலா சோகத்தை முன்கொண்டு செல்லும் நம்பிக்கையின் கீற்றாய் வரிகள்.. 

இதே திரைப்படத்தில் வரும் 'அலைகளின் ஓசைகள்' பாடல் அகதி ஒருவனைக் காதலிக்கும் பெண்ணினதும் இந்த அகதி இளைஞனின் உணர்வுகள் பற்றியும் அழகாகச் சொல்கிறது.
இந்தப்பாடலும் கபிலன் எழுதியது.

இன்னுமொரு பாடல் ஞாபகம் வந்தது
80களில் வெளிவந்த 'ஏமாறாதே ஏமாற்றாதே' என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் - அப்போது உணர்ச்சிகள் மிகுந்த எனது 9வது 10வது வயதில் அந்தப் பாடல் எனக்கு முழுக்கப் பாடமாயிருந்தது.

'எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
என்று ஆரம்பிக்கும் பாடல் அது!

தெரிந்தவர்கள் ஞாபகித்துக் கொள்ளுங்கள்!
முழு வரிகளையும் நான் எழுதினால் வம்பு!

ஓர சில வரிகள் மட்டும்
'பாரதி இசைத்த இலங்கையிலேயே
பைந்தமிழ் இனத்தின் துயரநிலை
இன்று ஈழத்திலே அவர் அழுகையொலி
இடைவந்த தண்ணீராய்க் கிடக்கிறது'

பாடியவர் TMS என்று நினைக்கிறேன்
இசை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.

இன்னும் இலங்கைத் தமிழ்ப்பாவனையுடன்
தெனாலி - இஞ்சருங்கோ ஆலங்கட்டி மழை
பந்தயம் - சுராங்கனி

மற்றும்
ஸ்ரீலங்கா – LTTE தொடர்புடன் டிஷ்யூம் படப்பாடல் இருந்தாலும் அவற்றை நான் எனது பதிவுப் பரப்புக்குள் கொண்டுவரவில்லை.


23 Responses to "அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்!"

  • 'டொன்' லீ

    அருமையான தொகுப்பு..
    “தோல்வி நிலையென” என்ற ஊமைவிழிகள் பாடல் 80 களின் இறுதியில் வந்தது. நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் புரட்சிகரப் பாடலாக பலராலும் பாவிக்கப் பட்டதாக ஞாபகம்.

  • Thooya

    லீ சொன்னதையே நானும் நினைத்தேன். மிக அருமையான பதிவு. எமக்கான குரல்கள் உண்மையாக ஒலிக்கும் போது மகிழ்வாக உள்ளது..

  • Anonymous

    நட்சத்திரம் ஆக்கி திரும்பி முருங்க மரம் ஏத்திட்டாங்க போல? நீங்க உள்ள இருக்கயில ஒரு சிலர்தான் அதுபற்றிய தங்கள் ஆதங்கத்தை பின்னூட்டமாக பதிந்தார்கள்.. வெளிய வந்த பிறகுதான் பயமில்லாம நூத்துக்கு மேல பின்னூட்டம் போட்டாங்க.. கஷ்டம் எண்டு வந்தால் அது உங்களுக்கு மட்டும் தான் வரும்..

  • கார்க்கி

    :))

  • Suba

    என்னவோ தெரியவில்லை இந்தப் பாடலை முதன் முதல் கேட்ட போதே இதைபப் பற்றி நீங்கள் எஅழுதுவீர்கள் என்று நினைத்தேன். நடந்துவிட்டது. விஜய் அரசியலுக்கு வருவதறகான ஆயத்தங்களை ஆரம்பித்து விட்டார். ஆனால் எமது துன்பங்கள் தான் தீர்ந்தபாடில்லை. வெறும் ஒற்றை வரிகள் வாருவதை எழுதியே இவ்வளவு தான் வந்ததா? அது சரி படமாக எடுத்தால் பெட்டிக்குள் தூங்க வேண்டியது தான் .

  • Paheerathan

    இப்பாடலை கேட்டவுடன் இந்த வரிகள் வரும்போது காட்சி ஆக இருக்கிறதா ஆக இருக்கிறதா எண்டு பார்க்க வேணுமெண்டு நினைத்தேன் . ஒருவேளை ஆக இருக்குமோ எண்டு நினைத்து .

    யார் கூடியாவது இழுக்கட்டும்

    இப்போதுள்ள பாடலாசிரியர்கள் பலர் இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவானவர்கள்தான் . கபிலனும் கூட பல கவிதைகள் எழுதியிருக்கிறார் .
    தோல்வி நிலையென நினைத்தால் பாடல் ஒலிக்காவிட்டால் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ ஹர்த்தாலோ நடந்தது மாதிரி இல்லை அந்நாட்களில்.

    ராமேஸ்வரம் படத்துக்கு இசை நிரு.........ஒருவேளை எழுத்துப்பிழையோ ??

  • LOSHAN

    நன்றி டொன் லீ, தூயா,அனானி,கார்க்கி,சுபா,பகிரதன்

    தோல்வி நிலையென நினைத்தால் பாடல் நேரடித் தொடர்பில்லை என்ற காரணத்தால் தான் தவிர்த்தேன்..

    அனானி, இந்தப் பதிவு அப்படியொன்றும் பயங்கரமில்லை என்றே நம்புகிறேன்... அடுத்தது, என் பதிவுகளால் எனக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என முற்கூட்டியே நான் குறிப்பிட்டிருந்தேன்..

    சுபா, அடிக்கடி வெற்றி கேட்பவரோ நீங்கள்?

    நன்றி பகிரதன், எழுத்துப் பிழை தான்.. நன்றி.. திருத்திக் கொண்டேன்.. அது நிரு தான்..

  • கானா பிரபா

    நல்லபதிவு அதே போல் எரிமலை எப்படி வெடிக்கும், மனிதா மனிதா இனியும் உன் விழிகள் சிவந்தால், இன்ன பிற ஆரம்பகால விஜயகாந்தின் படங்கள் சிலவற்றிலும் வந்த பாடல்கள் இருக்கின்றன. அவையும் ஒருகாலத்தில் பயன்பட்டன.

  • Anonymous

    தொடர்ந்தும் நத்தை உஉர்வதையும், துபாயில் வானவேடிக்கையையும் , கிரிக்கட், சினிமா என்று பல பொதுவான விடயங்களே எழுதுகிறீர்கள் , பயந்து விட்டீர்களோ என்று நினைத்தேன் ...........
    இல்லை என்பதை நிருபித்திருக்கிறீர்கள்.
    நல்ல ஆய்வு.good.

  • மாயா

    // இளையதளபதி தனது ரசிகர்களுக்குப் பாடல்கள் மூலமாக MGR பாணியில் உணர்ச்சியூட்டுவார்;உசுப்பேற்றுவார்! //

    மாதிரியே பிற்காலத்தில் வருவாரா ?

  • Sinthu, Bangladesh

    'அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்' என்ற இந்த வரிகள் தான் இந்தப் பாடலின் ஹிட்டுக்குக் காரணம் என்று சொல்லவும் வேண்டுமா?
    We have already knew anna.
    Fantatic post.....

  • Thusha , Bangladesh

    விடை கொடு எங்கள் நாடே ............

    "உயிர்தொடும் வரிகள் வைரமுத்து தந்தார் என்றால் உருக வைக்கும் இசையில் இளகி வைத்தவர் ரஹ்மான்."

    நான் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று, எப்போது கேட்டாலும் மனதில் ஒரு நெருடல் இருக்கும்
    நல்ல ஓர் பதிவு அண்ணா
    நன்றிகள்

  • sinthu

    that's fantastic anna......
    that was my typing mistake

  • attack pandiyan

    எனக்கு தெரிந்த வகையில் விஜய் மனைவி சங்கீதா லண்டனில் வசித்த ஈழ பெண் ஆவார்.. அந்த வகையில் ஈழத்து மருமகன் என்று அழைப்பதே உங்களுக்கு சரி

  • Paheerathan

    ஓஹ்ஹ்....பின்னூட்டம் அனுப்பிய பின்புதான் பார்த்தேன் சில ஆங்கில சொற்களை சேர்க்க மறந்து விட்டேன் அதி இல்லாமல் அர்த்தமே இல்லாமலிருக்கிறது.
    அது இப்பிடி இருக்க வேணும்(ஒரு சின்ன patch work):)

    //இப்பாடலை கேட்டவுடன் இந்த வரிகள் வரும்போது காட்சி Long Shot ஆக இருக்கிறதா Close up ஆக இருக்கிறதா எண்டு பார்க்க வேணுமெண்டு நினைத்தேன் . ஒருவேளை Patch work ஆக இருக்குமோ எண்டு நினைத்து .//

  • நளன்

    அருமை

  • எம்.ரிஷான் ஷெரீப்

    அருமையான, வித்தியாசமான பதிவு லோஷன்..வாழ்த்துக்கள் !
    தொடருங்கள் !

  • Anonymous

    anna nice wrk...
    c this video also...விடை கொடு எங்கள் நாடே...
    very heart touching...
    (nt the actual movie visual)
    Link :
    http://www.youtube.com/watch?v=RP7xbzZ8OBw)

    maggi..

  • Anonymous

    anna nice wrk...
    c this video also...விடை கொடு எங்கள் நாடே...
    very heart touching...
    (nt the actual movie visual)
    Link :
    http://www.youtube.com/watch?v=RP7xbzZ8OBw

    maggi

  • தியாகி

    எனக்கும் சரி என் தாயாருக்கும் சரி, "விடைகொடு எங்கள் நாடே..." மற்றும் "எல்லோரையும் ஏற்றி போக..." என்னும் பாடல்களை கேட்கும்போது மனம் உருகும்.ஈழத்து தமிழர் எல்லோருக்கும் பொதுவான ஒரே விடயம் என்னவென்றால் ஒரே சொல் தான்- 'இழப்பு'.அதற்கு நாம் புறம்பானவர்கள் அல்ல.ஒவ்வொரு முறையும் மாணிக்க விநாயகம் அவர்களின் ஓலத்தை கேட்கும்போதும் நெஞ்சுக்குள் ஏதோ அடைத்துக்கொள்ளும்.அதனாலேயே இந்த இரு பாடல்களையும் நான் கேட்பதை தவிர்த்து வருகிறேன்.ஆனால் எனக்கு என்னவோ "ராமா ராமா" பாடலில் விஜய் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார் என்று தோன்றுகின்றது.அஜித்தின் அடுத்த படத்தில் இவ்வாறான வரிகள் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அருமையான பதிவு லோஷன் அண்ணா!

  • கவின்

    அருமையான பதிவு

  • LOSHAN

    நன்றி கானா அண்ணா..
    ம்ம் அந்தக் காலத்தில் கேட்ட ஞாபகம்.

    நன்றி அனானி.. ஆனால் அதைப் படிக்கவும் நண்பர்கள் வந்தார்கள்.. பயத்துக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. :)

    மாயா.. அப்படி முடிவெடுக்கும் துணிச்சல் பின்னர் ரஜினியிடம் இருக்கவில்லை.. இவர் எப்படியோ?பொறுத்திருந்து பார்போம்..

    நன்றி சிந்து,துஷா

    அட்டாக் அண்ணே..அமாம்ங்க்னா.. அவரது இலங்கை உறவு பற்றி முன்னர் ஒரு பதிவுல சொன்னேன்னா..

    நன்றி பகீ.. முதலில் எனக்கும் புரியல.. ஹீ ஹீ

    நன்றி நளன், ரிஷான்

    நன்றி மகி,கவின்

    தியாகி, உங்கள் படம் பார்த்தாலே புரியுது..
    அஜித் இவ்வாறு துணிவாரா தெரியாது..ஸ்டண்ட் ஆக இருந்தாலும் மாற்ற யாரும் அண்மையில் இவ்வாறு செய்யவில்லையே..

  • siva

    nice


Post a Comment

Related Posts with Thumbnails

சொடுக்கி இணைக்க...



Creative Commons License
LOSHAN - லோஷன் by A.R.V.Loshan is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.